Translate

Monday 16 April 2012

துறவி இராச்சியமாகும் இலங்கை


துறவி இராச்சியமாகும் இலங்கை
essayமஹிந்த ராஜபக்ஷ பழிவாங்கும் குணமும், சர்வதிகாரப் போக்கும், கொண்ட காடைத்தனமான செயல்களில் ஈடுபடுகின்ற ஒருவராக மாற்றம் பெற்று விளங்குகின்றார்.
 மார்ச் 2013இல் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றி அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசிடம் 19 ஆவது கூட்டத் தொடரில் கேட்டுக் கொண்டது.
 
இந்தக் கூட்டத் தொடரின் போது  இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஏப்ரல் 04 இல் இலங்கை நாடாளுமன்றில் விவாதம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறெனினும், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் எவற்றை இலங்கை அரசு நிறைவேற்றவுள்ளது என்பது தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் அறிவிக்கத் தவறிவிட்டார்.
 
கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது விளக்கவுரைக்கு அப்பால் சென்றுள்ளதாக மார்ச் 27 அன்று நீர்ப்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்திருந்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை எதிர்த்து இந்தியா வாக்களித்ததை விட, சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான கடும் போக்கான தீர்மானத்தை இந்தியா எடுக்க வேண்டியுள்ளது.
 
பேரவையில் இந்தியா அளித்த வாக்கானது சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. இந்தியா இலங்கையை எதிர்த்து வாக்களித்ததை தாராளவாதிகள் வரவேற்றுள்ளனர். ஆனால் அரசியல் அவதானிகளும் விமர்சகர்களும் இந்தியாவின் இந்தத் தீர்மானமானது பூகோள அரசியல் ரீதியில் தவறிழைக்கப்பட்ட ஒன்றாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் இவ்விரு நிலைப்பாடுகளும் சரியானவையல்ல.
 
நிறவெறிக் கொள்கையை எதிர்த்து 1965 இல் உருவாக்கப்பட்ட ஐ.நா. உடன்படிக்கையை வடிவமைப்பதில் இந்தியா பங்கேற்றிருந்தது என்பதை தற்போதைய இந்தியாவின் நிதி அமைச்சரும் அணிசேரா நாடுகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரணாப் முகர்ஜி மறந்திருக்கலாம்.
 
இதேபோன்று பாலஸ்தீனம் உட்பட அரேபிய நாடுகளை ஆக்கிரமிக்கும் கொள்கைக்கு எதிராக ஐ.நாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருந்தது. ஆக்கிரமிக்கப்பட்ட சிரியா மற்றும் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் என்பவற்றில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்தும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
அரேபியக் கூட்டமைப்பின் அழுத்தத்தின் காரணமாகவே இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தது. ஆகவே இந்நிலையில் பூகோள அரசியல் என்பது கூட்டல் கணக்கு போன்றதல்ல.
 
மேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து இந்தியாவின் இரு தரப்பு தலையீடானது எவ்வாறு வித்தியாசப்படுகின்றது? 1980களில், அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளில் நாடுகளின் எல்லைகளில் இடம்பெற்ற கிளர்ச்சிகளுக்கான ஆதரவு செல்வாக்காகிய போது, இந்தியா, தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு தனது ஆதரவை வழங்கியிருந்தது. பின்னர் தனது அமைதி காக்கும் படையை இலங்கையில் களமிறக்கியிருந்தது.
 
இலங்கை சாதகமான நகர்வுகளை எடுத்திருந்தால், இந்தியாவோ அல்லது ஐ.நா. மனித உரிமைகள் சபையோ தமது தலையீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்த தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு தனது அதிகாரத்தைப் பிரயோகித்தது. இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்கில் 50,000 நிரந்தர வீடுகளை ரூபா 3.48 இலட்சம் செலவில் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது.
 
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பழிவாங்கும் குணமும், சர்வதிகாரப் போக்கும், கொண்ட காடைத்தனமான செயல்களில் ஈடுபடுகின்ற ஒருவராக மாற்றம் பெற்று விளங்குகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் உண்மையான யுத்த கதாநாயகனாகத் திகழ்ந்த சரத் பொன்சேகா தேசத் துரோகி எனப் பட்டம் சூட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதிகாரப் பரவலாக்கல் மற்றும் மீளிணக்கப்பாடு என்பன வழங்கப்படாது காலந்தாழ்த்தப் படுகின்றன.
 
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நலனைத் தான் அடைந்து கொள்வதற்காக, ஐரோப்பிய நாடுகளிலிருந்த தனது தூதரங்களை மூடிக்கொள்வதென இலங்கை தீர்மானித்தது. இலங்கைக்கு எதிராக வாக்களித்த ஐரோப்பிய நாடுகள் இலங்கையின் தேசிய பிரச்சினையில் தமது ஆதரவை அடைந்து கொள்வதற்கான எந்தவொரு நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.
 
இலங்கை ஜனாபதி இவ்வாறானதொரு அணுகுமுறையைக் கைப்பற்றியதானது, ஆசிய கண்டத்தின் தனித்துப்போன புதிய "துறவி இராச்சியம்' என்ற நிலையை இலங்கை அடைந்து கொண்டது. இலங்கையில் ஏற்கனவே குடும்ப ஆட்சி நடைபெறுகின்றது. 
 
அண்மைய வரலாற்றில் ஆசிய நாடுகளில் எதிலும் இலங்கையைப் போல் குடும்ப ஆட்சி நடைபெறவில்லை. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
 
அதிபரின் சகோதரர்களில் ஒருவரான கோத்தபாய ராஜபக்ஷ தற்போது இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு செயலராகக் கடமையாற்றுவதுடன், பிறிதொரு சகோதரரான பஸில் ராஜபக்ஷ இலங்கைப் பொருளாதார அபவிருத்தி அமைச்சராகப் பதவி வகிக்கின்றார்.
 
அதிபரின் மூத்த சகோதரன் சமல் ராஜபக்ஷ தற்போதைய இலங்கை நாடாளுமன்றின் சபாநாயகராக உள்ளார். சமல் ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் சமீந்திர ராஜபக்ஷ இலங்கை எயார் லைன்சின் இயக்குநராகவும், ராஜபக்ஷவின் மைத்துனரான நிசாந்த விக்கிரமசிங்க இலங்கை எயார்லைன்சின் தலைவராகவும் கடமையாற்றுகின்றனர்.
 
ராஜபக்ஷவின் மருமகனான சசீந்திர ராஜபக்ச ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக உள்ளார். தொழில் ரீதியாக தேயிலை வர்த்தகராக உள்ள ஜனாதிபதியின் முதலாவது மைத்துனர் ஜலியா விக்கிரமசூரிய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதராக 2008 இலிருந்து கடமையாற்றுகின்றார்.
 
ஜனாதிபதியின் மைத்துனரான, வர்த்தகரான உதயன்க வீரதுங்க, 2006 இலிருந்து ரஸ்யாவுக்கான இலங்கைத் தூதராக கடமையாற்றுகின்றார். இலங்கையில் தற்போது நிலவும் குடும்ப ஆட்சியானது இலங்கையர்களின் வாழ்வின் ஒவ்வொரு விடயத்திலும் கட்டுப்பாட்டை விதிக்கின்றது. அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பில் இரு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதிப் பதவியை வகிப்பதற்கான சலுகையை வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment