Translate

Sunday 15 April 2012

இந்தியாவும் எஸ்தோனியாவை போல வளரும் நாள் எந்நாளோ என்கிற ஏக்கத்தோடு தான் திரும்பியிருக்கிறேன் - தொல்.திருமாவளவன்


இந்திய அரசின் சார்பில் உயர் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 24 கொண்ட குழு எஸ்தோனியா நாட்டிற்கு கடந்த 7 ஆம் தேதி சென்றுள்ளது. அந்நாட்டில் ஆட்சி நிர்வாகம் மின்னனுவியல் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை கண்டறியும் வகையிலும் கற்றுக்கொள்ளும் வகையிலும் கல்விபயணமாக இது அமைந்துள்ளது. இக்குழுவில் இந்திய ஆட்சி நிர்வாகத்தை (civil services) சார்ந்த உயரதிகாரிகளும் அடங்கிய அக்குழுவில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கரஸ் கட்சியை சார்ந்த உண்டவள்ளி அருண்குமார், ஐஸ்வர் கிங் மற்றும் பிஜூ ஜனதாதளத்தை சார்ந்த மாத்தாப் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சார்ந்த இளம்அமைச்சர் ஆகுல்லா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 7.04.2012 முதல் 14.04.2012 வரையில் ஒரு வாரகாலத்திற்கு இக்குழு எஸ்தோனியாவில் தங்கியிருந்து மின்னனுவியல் தொடர்பான ஆட்சி நிர்வாக கட்டமைப்புகளை பற்றி நடைபெறும் வகுப்புகளில் கலந்துக்கொள்கின்றனர். அத்துடன் நேரிலும் பார்வையிடுகின்றனர்.

இக்குழுவில் இடம்பெற்ற தொல்.திருமாவளவன் அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஒட்டி நெய்வேலியில் நடைபெறும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 12 ஆம் நாள் அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் பேசியபோது அவர் தெரிவித்த கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு : "இது மிகவும் பயனுள்ள ஒரு கல்வி பயணம். இதில் முழுமையாக பங்கேற்க இயலவில்லை என்பது வருத்தமளிக்கிறது. புதுதில்லியிலிருந்து ஃபின்லாந்தின் தலைநகரமான ஹெல்சிங்கி என்னும் நகரத்தை சென்றடைந்தோம். அங்கு இந்திய நாட்டின் தூதுவர் தமிழகத்தை சார்ந்த திரு.மாணிக்கம் அவர்கள் வரவேற்றார். அங்கிருந்து ஃபின்லாந்து வளைகுடாவை கடந்து கப்பலில் எஸ்தோனியா நாட்டின் தலைநகரான டாலினுக்கு சென்றோம். அங்கே அரசு சாரா தொண்டு நிறுவனமான e-governance academy என்னும் அமைப்பின் சார்பில் எங்களை வரவேற்றனர். அவர்கள் இந்திய அரசோடு ஏற்படுத்திக்கொண்ட புரிதலின் அடிப்படையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எஸ்தோனியா என்பது 13 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்டுள்ள சிறிய நாடாகும். டென்மார்க், இங்கிலாந்து, ரசியா போன்ற வல்லரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்த இந்த சிறிய நாடு 1991 ஆம் ஆண்டிலிருந்து முழு விடுதலை பெற்ற நாடாக இயங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் உலகில் போற்றுதலுக்குரிய சிறப்பிடத்தை பெறும் வகையில் பொருளாதாரம், ஆட்சி நிர்வாகம் போன்ற துறைகளில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக ஆட்சி நிர்வாகத்தில் மின்னனுவியல் தொழில்நுட்பத்ததை பயன்படுத்துவதில் உலகில் முதல் 20 நாடுகளில் இதுவும் வளர்ச்சியடைந்துள்ளது.
காகிதமில்லா ஆட்சி நிர்வாகம் என்பதை மிகவும் வெற்றிகரமாக இந்நாடு நடைமுறைபடுத்திவருகிறது. அரசுக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துள்ளது. ஒவ்வொரு குடிமகனும் வீட்டிலிருந்தபடியே இணையதளங்களின் மூலமாகவும் கைபேசிகளின் மூலமாகவும் அரசாங்கத்தை தொடர்புகொள்வதற்கு மிகவும் எளிமையான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசிடமிருந்து சான்றிதல்களை பெறுவது, இடம், வண்டி போன்ற சொத்துகளை அரசிதழில் பதிவு செய்வது , மருத்துவர்களை அனுகுவது, காவல்துறையினரை அனுகுவது , வங்கி கணக்கு வழக்குகளை கையாளுவது சந்தைகளில் பொருள் வாங்குவது விற்பது , பள்ளிக்கல்லூரிகளில் பயில்வது நீதித்துறை நடவடிக்கைகளை கையாளுவது, அரசுக்கு வரி செலுத்துவது நாடாளுமன்ற கூட்டம் மற்றும் அமைச்சரவை கூட்டங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது இப்படி அனைத்துத்துறைகளின் அன்றாட நடவடிக்கைகளையும் , ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகத்தையும் மின்னனுவியல் தொழில்நுட்பத்தின் மூலம் எஸ்தோனிய அரசு வெற்றிகரமாக நடைமுறைபடுத்தி வருகிறது.

அந்நாட்டு மக்கள் தொகையில் 39 சதவீதம் பேர் மின்னனுவியல் ஆட்சி நிர்வாகத்தில் (e-governance) பங்கேற்றுள்ளனர். 71 சதவீதம் பேர் தம்முடைய இல்லங்களில் கணினிகளை பயன்படுத்துகின்றனர். 68 சதவீதம் பேர் broadband வசதிகளை பெற்றுள்ளனர். அந்நாட்டில் பிறப்பு விகிதமும் இறப்பு விகிதமும் சரிசமமாகவே அமைந்துள்ளது. அம்மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பிறந்த உடனே பிறப்பு அடையாள அட்டை புதிய அடையாள எண்களுடன் வழங்கப்படுகிறது. அத்துடன் mobile-ID மற்றும் e-ID ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த அடையாள அட்டைகள் தான் அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடைவெளியே இல்லாத அளவிலான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன்மூலம் ஆட்சி நிர்வாகத்தை விரைவுப்படுத்துவது ,குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது , ஊழலை ஒழித்துக்கட்டுவது, பொது அதிகாரத்தை மேம்படுத்துவது இவை போன்ற கணக்கிலடங்காத வகையில் நல்ல பயன்களை அந்நாடு பெற்றுள்ளது. அதாவது e-governance , e-police , e-help , e-justice , e-education , e-banking , e-cabinet போன்ற அனைத்துத்துறைககளிலும் மின்னனுவியல் தொழில்நுட்பத்தை கொண்டதாக எஸ்தோனியா மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதையும் அவற்றின் வரலாற்று பின்னணிகளையும் விளக்குகிற வகையில் மின்னனுவியல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பல்வேறு தலைப்புகளில் வகுப்பெடுத்தனர்.

மேலும் நாடாளுமன்றம் , பிரதமர் அலுவலகம் , அரசு பள்ளிகள் போன்ற இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று பார்வையிட செய்ததுடன் விளக்கமுமளித்தனர். அமைச்சர்கள் வெளிநாடுகளில் இருந்தால் கூட அங்கிருந்தபடியே அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியும். ஒவ்வொரு அமைச்சருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதற்குரிய மடிக்கணினி அரசு சார்பில் அவரவர் இருக்கைகளில் பொருத்தப்பட்டுள்ளது. காகிதம், பேனா போன்றவை இல்லாமலையே அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டங்களில் பங்கேற்க முடியும். இவ்வாறு அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போகலாம் அந்தளவிற்கு மின்னனுவியல் தொழில்நுட்பத்தை ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டு தொடர்புகளிலும் இதனை முழுமையாக விரிவுபடுத்த முயற்சித்து வருகின்றனர்.

பெண்கள் மற்றும் இனவழிசிறுபான்மையினருக்கு பாகுபாடு இல்லாத வகையில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மொத்தம் உள்ள 101 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். எஸ்தோனியர்கள் 69 சதவீதமும் ரசியர்கள் 28 சதவீதமும் மிச்சம் பிறஇனத்தை சார்ந்தவர்களும் அந்நாட்டில் வசிக்கின்றனர். தமது தாய்மொழியான எஸ்தோனிய மொழியில் அமைந்துள்ள பாடலுக்கு மட்டுமே ஒரு திருவிழாவை ஆண்டுதோறும் நடத்துகின்றனர். அது எஸ்தோனியா பாடல் என அழைக்கப்படுகிறது. அதில் லட்சகணக்கான எஸ்தோனியர்கள் கலந்துக்கொள்வது வழக்கமாக நடைபெறுகிறது. அந்தளவிற்கு தமது தாய்மொழிக்கு அவர்கள் சிறப்பிடமளிக்கின்றனர். அவர்கள் ஆங்கிலத்தை பயன்படுத்துவது என்பது அரிதாகவே இருக்கிறது. இந்தியாவும் எஸ்தோனியாவை போல வளரும் நாள் எந்நாளோ என்கிற ஏக்கத்தோடு தான் திரும்பியிருக்கிறேன். இந்தியாவில் முழுமையாக e-governance நடைமுறைக்கு வந்தால் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி குறையும் , விளிம்பு நிலை மக்கள் வரையில் ஜனநாயகம் பரவும்." இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
 

No comments:

Post a Comment