Translate

Thursday 19 April 2012

ஈழத் தமிழர் மீது கொண்ட அக்கறையினாலேயே ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்தது இந்தியா யாழ்ப்பாணத்தில் சுஷ்மா சுவராஜ் தெரிவிப்பு


ஈழத் தமிழர் மீது கொண்ட அக்கறையினாலேயே ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்தது இந்தியா  யாழ்ப்பாணத்தில் சுஷ்மா சுவராஜ் தெரிவிப்பு
news
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்தும் அதற்கு அரசியல் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற அக்கறையினாலுமே ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது என்று தெரிவித்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா சுவராஜ்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்கள், உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள், முக்கிய ஆலயங்களது பாதிரிமார்கள், இந்துக் குருமார்கள் உட்பட சிவில் சமூகத்தினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர். 
யாழ்ப்பாணத்தில் அளவுக்கு மீறிக் காணப்படும் இராணுவப் பிரசன்னம், விகாரைகளின் ஆக்கிரமிப்புச் சட்டம் ஒழுங்கு நிலைமை என்பன குறித்து சிவில் சமூகப் பிரதிநிதிகள் இந்தியக் குழுவினருக்கு விளக்கினர்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாயின் அதில் காலத்துக்கு ஏற்ற போதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று சிவில் சமுகப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
இதன்போது, வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் தமது சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள நெருக்கடிகள் தொடர்பாக இந்தியக் குழுவினரிடம் மனு ஒன்றைச் சமர்ப்பித்தார்.
அந்த மனுவில், இலங்கை அரசு 2009ஆம் ஆண்டு இறுதிப் போரில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் பற்றியே அதிக கவனம் செலுத்தி வருகின்றது. 1990 இல் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியமர்வு பற்றி எதுவித ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாக இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் இன்னமும் விடுவிக்கப்படாத பகுதிகளாக வலி.வடக்கில் 28 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதேவேளை, குறித்த சந்திப்பில் கலந்துகொள்வதற்காக யாழ்.அரச அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் அவர் அதில் கலந்துகொள்ளவில்லை.

No comments:

Post a Comment