Translate

Wednesday 16 May 2012

இந்தியா எதைத் தந்துவிடப்போகிறது என்று உழுத்ததைத் தூக்கிக் காட்டினீர்கள்? ; மெனிக்பாம் மக்கள் மீது பாய்ந்தார் அமைச்சர்


இந்தியா எதைத் தந்துவிடப்போகிறது என்று உழுத்ததைத் தூக்கிக் காட்டினீர்கள்? ; மெனிக்பாம் மக்கள் மீது பாய்ந்தார் அமைச்சர்
news
  இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஆய்வுசெய்ய வந்த இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவிடம் பழுதடைந்த பருப்பைக் காட்டியதற்காக வவுனியா இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்களைக் கடிந்துகொண்டார் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன்.

 
"இந்தியா என்னத்தைத் தந்துவிடப்போகிறது என்று அவர்களிடம் கொண்டுபோய் உழுத்த பருப்பைத் தூக்கிக் காட்டினீர்கள்'' என்று கடுகடுத்தார் அமைச்சர். நேற்று முன்தினம் இரவு 6.30 மணியளவில் கதிர்காமர் நலன்புரி முகாமுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மீள்குடியேற்ற அமைச்சர் தலைமையிலான குழுவினர் நலன்புரி முகாம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகக் கலந்துரையாடினார்.இதன் போதே அமைச்சர் மக்களிடம் மேற்கண்டவாறு கடிந்துள்ளார்.
 
இந்தக் கலந்துரையாடலில் மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர்:
இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்களில் புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
 
இறுதிக் கட்டப் போரின் போது தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து கதிர்காமர், ஆனந்தகுமாரசாமி இடைத் தங்கல் முகாமிலுள்ளவர்களில் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மக்களை அவர்களின் சொந்த இடங்களிலும் ஏனைய பகுதி மக்களை தற்காலிக இடைத்தங்கல் முகாமிலும் மீளக்குடியமர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
 
இடம்பெயர்ந்த மக்களின் சொந்த இடங்களிலுள்ள கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டு  மீளக்குடியேற்றம் செய்வதானால் இன்னும் 4 வருடங்கள் தேவை. அதனால் தற்போது மிகவும் அவசர அவசரமாக மீளக்குடியமரவுள்ள மக்களின் வீடுகள், கிணறுகள் மற்றும் மலசல கூடங்களைச் சுற்றியுள்ள சுமார் 10 அடி வரையுள்ள பகுதிகள் கண்ணிவெடி அகற்றப்பட்டு  மீளக்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment