Translate

Tuesday 8 May 2012

இந்து இளைஞர்களே! சமயம் காக்க வாருங்கள்!


இந்து இளைஞர்களே! சமயம் காக்க வாருங்கள்!

அன்புக்குரிய இந்து இளைஞர்களுக்கு, தாழமுடியாத வேதனையோடு இந்த மடலை எழுதுகின்றோம். எழுதுவதால் ஏதேனும் பிரயோசனம் உண்டா? என்று கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் ‘இல்லை’ என்பதாகக் கூட இருக்க முடியும். 
இருந்தும் எழுதுவதையும் நிறுத்தி விட்டால் அது படுமோசமாகிவிடும் என்பதின் அடிப்படையில் இவ்வறிக்கையை வெளியிட நேர்ந்தது.
அன்புக்குரிய இந்து இளைஞர்களே!

இந்த உலகம் முழுவதிலும் உள்ள சமயங்களை எடுத்துக் கொண்டு எந்த சமயத்தில் இளைஞர்கள் நாட்டம் குறைந்தவர்களாக - சமயப்பற்று இல்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்றொரு ஆய்வு நடத்தினால், அதன் முடிபு இந்துசமயம் என்பதாகவே இருக்கும். அது எந்த நாட்டில் அதிகம் என்ற அடுத்த ஆய்வு வினாவுக்கான பதில் இலங்கை என்பது முடிபாகவரும்.
எமது அருமை இந்து இளைஞர்களே!
ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். பெளத்த இளைஞர்கள் கிரமமாக பன்சாலைக்குச் சென்று பிரார்த்தனை நடத்துகின்றனர்.
கத்தோலிக்க இளைஞர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தங்கள் தொழிலையும் நிறுத்திவிட்டு தேவாலயத்திற்குச் செல்கின்றனர்.
இஸ்லாமிய இளைஞர்களோ ஐந்து நேரத் தொழுகை, அது தவறினால் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு, உலகம் அழிவதாக இருந்தாலும் தொழுகை தப்பாமல் நடக்கும்.
சீக்கிய மதத்தை ஒருகணம் பாருங்கள், தங்கள் மதத்தின் அடையாளத்திற்கு அவர்கள் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் தலைப்பாகை சுற்றிய தலைமுடியில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
ஆனால், எங்கள் இந்து இளைஞர்களை எப்படிக் கண்டு கொள்வது. நாங்கள் பிரார்த்தனைக்காக மாதத்தில் ஒரு தடவையேனும் கோயிலுக்குச் செல்லும் பழக்கம் உடையவர்களா? ஏன்தான் இப்படி. சமயப்பற்றில்லாத உங்கள் மனநிலையால் இந்து ஆலயங்கள் - இந்து சமயம் படும் அவலங்களைப் பாருங்கள்.
இப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இருக்கக்கூடிய வாகனங்களின் தலைகளை வெட்டிவிடுகின்றார்கள். எத்தனையோ இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனங்களின் தலையை வெட்டுபவர்கள் யார்? இதுபற்றி இளைஞர்களாகிய நீங்கள் சிந்தித்ததுண்டா?
இப்படியான கொடும் செயலை பன்சாலையில், கத்தோலிக்க தேவாலயத்தில், பள்ளிவாசலில் செய்திருந்தால், இந்த நாடே கலங்கும்படியாக ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றிருக்கும்.
ஆனால் இந்து ஆலயங்கள் என்றால் அங்கு களவெடுக்கலாம். அதன் அண்மித்த பகுதிகளில் விகாரைகளை நிறுவலாம். வாகனங்களின் தலைகளைக் கொய்யலாம் என்றாகிவிட்டது.
எது நடந்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். இந்து இளைஞர்கள் தங்கள் பிறப்புச் சமயத்தை- இந்து ஆலயங்களை பாதுகாக்க முன்வர வேண்டும்.
அதற்காக சமண சமயத்தவர்களுக்கு தண்டனை கொடுத்த சம்பந்தராக நீங்கள் மாறினாலும் அது வரவேற்கப்படும். தயங்காதீர்கள். இந்து சமயத்தைக் காப்பாற்றுவது உங்கள் தாயை காப்பாற்றுவதற்கு ஒப்பானது.
வலம்புரி ஆசிரியர் தலையங்கம்

No comments:

Post a Comment