Translate

Wednesday 2 May 2012

புலிக் கொடி எப்படி வந்தது? ITN செய்திக்கு ஐக்கிய தேசியக் கட்சி பதிலடி!


புலிக் கொடி எப்படி வந்தது? ITN செய்திக்கு ஐக்கிய தேசியக் கட்சி பதிலடி! 

அரசாங்க நிறுவனம் ஒன்றின் தலைவரே புலிகளின் கொடிகளைக் காட்சிப் படுத்தி, பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் 
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய பொது மேதினக் கூட்டத்தில் புலிக் கொடியுடன் சிலர் நடமாடிய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து சுயாதீன தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக்கு பதிலளிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் ரொஸ்மன்ட் சேனாரத்னவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில்,


ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் யாழ்ப்பாணத்தில் நடத்திய பொது மே தினக் கூட்டத்தை படம்பிடிக்கவும், செய்தி சேகரிக்கவும், அரச, தனியார் ஊடகங்கள் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களும் அங்கு கூடியிருந்தன. அத்துடன், ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்ட பேரணிக்கு ஆயிரக் கணக்கான பொலிஸாரும் பலத்த பாதுகாப்பை வழங்கியிருந்தனர். எனினும், இவர்கள் யாருடைய கண்களுக்கும் தென்படாத ”புலிக் கொடி” அல்லது புலிக் கொடியை ஏந்திய நபர்கள் சுயாதீன தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளருக்கு மாத்திரம் எவ்வாறு துல்லியமாக தென்பட்டது.

பேரணியில் கலந்துகொண்ட மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் குறித்த படப்பிடிப்பாளரையும், அந்தக் குழுவினரையும் பிடித்து கட்சியின் காமினி ஜயவிக்ரம பெரேராவிடம் ஒப்படைத்தனர். இதன்போது சுயாதீனத் தொலைக்காட்சியின் தலைவரது உத்தரவுகளுக்கமையவே தான் நடந்துகொண்டதாக படப்பிடிப்பாளர் இதன்போது தெரிவித்துள்ளார். இதனையடுத்து காமினி ஜயவிக்ரம பெரேரா அவரை எச்சரித்து விடுவித்தார். இதன்பின்னர், ”புலிக் கொடி” காண்பித்து மோசடி செய்த நபர்களும் சுயாதீன தொலைக்காட்சி பணியாளர்களுக்குரிய வாகனத்தில் பயணம் செய்ததாக தெரியவந்தது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறான இயக்கத்தின் கொடியை வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனினும், புலிக் கொடியை வைத்திருந்தவர்களை சுயாதீனத் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளர் பார்த்தவுடன், அடிக்கு ஒரு பொலிஸ் அதிகாரியென வழிநெடுகிலும் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புத் தரப்பினருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்திருக்கலாம். எனினும், படப்பிடிப்பாளர் அதனைச் செய்யவில்லை. இதன்படி சுயாதீனத் தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர் அவர்களுக்கு உதவியுள்ளார் என்பது தெளிவாகிறது.

இவ்வாறான காட்சிகள் கிடைத்திருந்தாலும் அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒரு நடைமுறை இருக்கிறது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பிற்கமைய பணியாற்ற வேண்டிய பொறுப்பு சுயாதீனத் தொலைக்காட்சியின் தலைவருக்கு இருக்கிறது. இந்தக் காட்சிகளை பொலிஸாருக்கோ, இராணுவத்தினருக்கோ வழங்கியிருக்க வேண்டும். இதன்போது புலிக் கொடி ஏந்திய நபர்களை கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்த உதவியிருக்க வேண்டும். எனினும், சுயாதீனத் தொலைக்காட்சியின் தலைவரும் புலிக்கொடி ஏந்தியவர்களுக்கு உதவி செய்துள்ளார்.

இவற்றில் எதனையும் செய்யாது புலிக்கொடி காட்சிகளை சுயாதீனத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதுடன், தேசிய ரூபவாஹினிக்கும், இணையத்தளங்கள் பலவற்றுக்கும் சுயாதீனத் தொலைக்காட்சியின் தலைவர் வழங்கியுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி சுயாதீனத் தொலைக்காட்சியின் தலைவரும், அந்த நிறுவனப் பணியாளர்களும் பாரிய தவறொன்றை செய்துள்ளளனர். இந்தக் காட்சிகள் உடனடியாக பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்க வேண்டும் என எமது கட்சி கோரிக்கை விடுக்கிறது.

பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில், அரசாங்க நிறுவனம் ஒன்றின் தலைவரே புலிகளின் கொடிகளைக் காட்சிப் படுத்தி, பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகிறோம்.

No comments:

Post a Comment