Translate

Friday 4 May 2012

ராஜபக்‌ஷே - ஜம்இயத்துல் உலமா திரைமறைவுப் பேச்சுவார்த்தை ஏன்? Read more about ராஜபக்‌ஷே - ஜம்இயத்துல் உலமா திரைமறைவுப் பேச்சுவார்த்தை ஏன்? at www.inneram.com


கொழும்பு: கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தம்புள்ளை அல் ஹைரியா முஸ்லிம் பள்ளிவாயிலும் தம்புள்ளை இந்துக் கோவிலும் தீவிர இனவாதப் பௌத்த பிக்குகளின் தலைமையில் சேதமாக்கப்பட்டன.

சம்பவம் இடம் பெற்று இரு தினங்களில், "பௌத்தப் புனித பூமிப் பிரதேசத்தில் பிற சமய வழிபாட்டுத் தலங்கள் இருப்பது சட்ட விரோதமானது" என்ற அடிப்படையில், "உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில், பள்ளிவாசல் குறித்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டு, வேறு இடத்தில் அமைக்கப்பட வேண்டும்" என இலங்கைப் பிரதமர் அறிக்கை விடுத்திருந்தார். 


சிறுபான்மையின மக்களின் சமய வழிபாட்டு உரிமையை மறுதலிக்கும் வகையிலான இச்செயற்பாடுகள், உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தன. குறிப்பாக, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களான மு. கருணாநிதி, வைகோ
போன்றோர் பள்ளிவாயில் இடிப்புச் செயலை வன்மையாகக் கண்டித்திருந்தனர்.

தீவிர இனவாதிகளின் எதேச்சதிகாரப் போக்கையும் அதற்கான அரச ஆதரவையும் கண்டித்து உலகெங்கிலும் அனேக அமைப்புக்கள் எதிர்ப்புப் பேரணிகளை முன்னெடுத்திருந்தன. இலங்கையின் தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, நடுநிலைப் போக்குடைய சிங்களப் பெரும்பான்மை மக்களும் தமது கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்திருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற மாபெரும் பேரணியில் பல்லின மக்களும் கலந்துகொண்டனர். அதற்கு முன்தினம் கிழக்குப் பிராந்தியத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மேற்படி அடாவடித்தனத்துக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் 'ஹர்த்தால்' அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

மேலும், சிங்கள அரசின் பக்கசார்பு நிலைப்பாட்டைக் கண்டித்து மனோ கணேசன் முதலான தமிழ்க்கட்சித் தலைவர்களும், அஸாத் ஸாலி, ஹஸன் அலி முதலான முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் தமது வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தனர். 

இந்நிலையில், ஜெனீவாவில் உள்ள சர்வதேச இளைஞர் நாடாளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன், தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் வெளியிட்டிருந்த அறிக்கையில், "தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு அதன் இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தா விட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அது தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு சர்வதேச இளைஞர் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கும்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

இதேவேளை, கடந்த மே மாதம் முதலாம் திகதி, இலங்கை ஜமஅத்தே இஸ்லாமி இயக்கம், ஏப்ரல் 20 ஆம் திகதி தம்புள்ளையில் இடம் பெற்ற மேற்படி பள்ளிவாயில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அவ்இயக்கத்தின் உதவிப் பொதுச் செயலாளர் எம்.எம்.எச். ஹஸன் தமது அறிக்கையில், "தீவிரவாத சிந்தனை கொண்ட சிலரின் கோரிக்கையை ஏற்று தம்புள்ளைப் பள்ளிவாயிலை அகற்றுவதற்கோ இடம் மாற்றுவதற்கோ முயற்சிப்பது இலங்கை வரலாற்றில் ஒரு பிழையான முன்னுதாரணத்துக்கு வழிவகுக்கும். இந்த நாட்டின் முன்னோர்கள் பல அர்ப்பணிப்புகள் செய்து கட்டி எழுப்பிய ஆயிரம் வருட கால பௌத்த- முஸ்லிம் நல்லுறவைச் சீர்குலைக்கும் முயற்சியாகவே இது வரலாற்றில் பதியப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிவாயிலை இடமாற்றுவதற்கு முஸ்லிம் முன்னணி அரசியல் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளிவந்த அறிக்கை போலியானது என்று நிரூபிக்கப்பட்ட நிலையில், சர்வதேச ரீதியில் எழுந்த அழுத்தம் காரணமாக, முஸ்லிம் தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக பிரதமர் தி.மு. ஜயரத்னே தெரிவித்திருந்தார். எனினும், பல்வேறு அரசியல் காரணங்களால் குறித்த சந்திப்பு இடம்பெறவில்லை.

இதேவேளை, தென் கொரியா நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷே முஸ்லிம் தலைவர்களுடன் தம்புள்ளைப் பள்ளிவாயில் விடயமாகக் கலந்துரையாடுவார் எனப் பரவலாக  எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 'அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா ஜனாதிபதியை சந்தித்துப் பேசியுள்ளது. இந்தச் சந்திப்பு இரு தினங்களுக்கு முன்னர் இடம் பெற்றாலும் அது  தொடர்பான தகவல்களை சில காரணங்களால் ஜம்இயத்துல் உலமா வெளியிடவில்லை. அது தொடர்பான விபரங்கள் இன்று வெளியிடப்படவுள்ளது. அது தொடர்பான விபரங்கள் பின்னர் பதிவு செய்யப்படும்' என லங்கா முஸ்லிம்.ஆர்க் தளம் (03.05.2012) வெளியிட்டுள்ள செய்தி, பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை இலங்கைவாழ் முஸ்லிம்களின் ஆன்மீக விவகாரங்கள் தொடர்பில் பொறுப்பு வகிக்கும் ஒரு சமய நிறுவனம் ஆகும். அப்படியான ஒரு நிறுவனம், முழு முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கக் கூடிய ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினை குறித்துப் பகிரங்கமாய் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்திவிட்டு, நாட்டின் அதிபருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதன் மூலமே எதிர்பார்க்கப்படும் அடைவுகளை எட்ட முடியும் என்ற யதார்த்தத்தைப் புறந்தள்ளிவிட்டு அரசுடன் இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, பேச்சுவார்த்தை குறித்த விபரங்களை உடனடியாகப் பகிரங்கமாய் வெளியிடாமலும் இருப்பது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அதிபருக்கும் உலமா சபைக்கும் இடையில் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் இந்த இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் தற்போது கிளம்பியுள்ளன.

இவ்விடயம் குறித்து, "இலங்கை அரச பயங்கரவாதம், அதன் போர்க்குற்றங்கள் குறித்த ஜெனீவா மாநாட்டுப் பிரேரணை முன்னுதாரணமாய் உள்ள நிலையில், இத்தகைய இரகசியப் பேச்சுவார்த்தை முஸ்லிம் சமூகத்துக்குரிய உரிமைகளைப் பெற்றுத்தரும் முன்னெடுப்பில் எத்தனை சதவீதம் வெற்றியளிக்கும், அரசியல் பேரங்கள், அரச அச்சுறுத்தல்களால் பேச்சுவார்த்தையின் அடைவுகள் திசை திருப்பப்படும் அபாயம் ஏற்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளதா, ஊடகங்களின் ஊடான வெளிப்படைப் பிரசாரம் மூலம் பொதுமக்கள் ஒன்றிணைக்கப்பட்டு அரசின் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படும் வாய்ப்பை இலங்கை ஜம்இயத்துல் உலமா தவறவிட்டமை புத்திசாலித்தனமான முடிவுதானா?" என்பன போன்ற பலதரப்பட்ட கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment