Translate

Saturday 23 June 2012

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவம் மக்களிடையே போர்ப் பீதியை ஏற்படுத்துகிறது; தேசிய சமாதானப் பேரவை நடத்திய சர்வதேச மாநாட்டில் சுட்டிக்காட்டு


வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவம் மக்களிடையே போர்ப் பீதியை ஏற்படுத்துகிறது; தேசிய சமாதானப் பேரவை நடத்திய சர்வதேச மாநாட்டில் சுட்டிக்காட்டு
news
 போர் முடிவடைந்த பின்னரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவம் நிலைகொண்டிருப்பது அந்தப் பகுதி மக்கள் மத்தியில் போர்ப் பீதியை ஏற்படுத்துகிறது. அது மட்டுமன்றி நாட்டில் அமைதி ஏற்பட இது தடையாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

 
தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து தேசிய சர்வமத அமைப்பு கடந்த சனிக்கிழமை கொழும்பு புத்த ஜயந்தி நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடத்திய சர்வதேச மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மக்களை போர் மனோபாவத்திலிருந்து மீட்சி பெறவைப்பதற்கு சமயத் தலைவர்கள், அரசியல் வாதிகள், சிவில் சமூகத்தினர் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும்.
 
12 மாவட்டங்களிலுள்ள சர்வமத பேரவைக் கிளைகள் தேசியப் பிரச்சினை தொடர்பாக இருவருடங்கள் ஆராய்ந்ததன் நிறைவில் இந்த மாநாட்டில் 8 அம்சங்கள் கொண்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
போரின் பின்னால் உள்ள சூழலில் ஏற்படும் சந்தேகம், அச்ச நிலை, நம்பிக்கையின்மை போன்றவை நீக்கப்பட வேண்டும். வன்முறையை ஒழிக்க வேண்டும், ஒருவருக்கொருவர் செவிசாய்த்து மற்றவர் தேவைகளைப் புரிந்து கொள்ளும் சமூகம் ஒன்றை பயிற்றுவிக்க வேண்டும்.
 
போரால் பாதிக்கப்பட்ட பின் இலகுவாக பல இன்னல்களுக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மட்டுமன்றி ஏனைய நபர்களையும் அவர்கள் முகம் கொடுக்கும் அழுத்தங்கள் துன்பங்களில் இருந்த மீட்க வேண்டும்.
 
அனைவரது உரிமைகளும் பாதுகாக்கப்படும் நிலைமை உருவாக வேண்டும். தேசிய ரீதியில் ஏற்படக் கூடிய பதற்ற நிலையோ, போர் நிலையோ, மீண்டும் வரக்கூடிய சாத்தியக் கூறுகளை அகற்ற வேண்டும்.
 
இவை தொடர்பாக பொறுப்பதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரல், ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப ஒத்துழைத்தல் சிவில் சமூகத்தின் கடமை. நிலையான சமாதானத்தை மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்குக் கொண்டு வருதல் வேண்டும்.
 
போரால் பாதிக்கப்பட்டோரின் மனித நேயப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் நாட்டின் ஏனைய பிரிவினர்களுடன் ஒன்றித்து உறவாட உள்ள தடைகளை நீக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
 
கடந்த 30 வருட காலமாக நாட்டில் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்னடைவை ஏற்படுத்திய போர் காரணமாக ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளைக் குறைக்க முயற்சி செய்யவும் நிலையான சமாதானத்தை அடைவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு சர்வ மதத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் இணக்கப்பாட்டில் எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை இன்று முழுமையாக போர் மனோபாவத்துக்குள்ளே தள்ளப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் கொஞ்சமல்ல. இந்த மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்கள் அறிக்கையோடு நின்று விடாமல் செயல் வடிவுக்கு கொண்டு வரப்பட்டு அந்த மக்களின் விடிவுக்கு வழி கோல வேண்டும். என்றார்.

No comments:

Post a Comment