Translate

Monday 30 July 2012

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு நாம் தயார். ஆனால் அது நேர்மையானதாக இருக்கவேண்டும். - சம்பந்தன்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தை நேர்மையானதாக இருக்க வேண்டும் எனவும் அது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கக்கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. திரியாயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தையை அரசாங்கத்துடன் மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதான பேச்சுவார்த்தையாக இருக்கக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விழிப்புடன் இருக்கின்றது.
அண்மையில் கொழும்பில் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து நடத்திய கலந்துரையாடல்களின்போதும் இது பற்றி நாம் தெளிவாகக் கூறியிருந்தோம். அரசாங்கத்துடன் இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான தனது அடிப்படை நிலைப்பாட்டை தெளிவாக எழுத்து மூலம் முன்வைத்தது. அரசாங்கம் தனது பதிலை தருவதாக தெரிவித்தது. இன்னும் அதற்கான பதிலைத் தரவில்லை. அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கமுடியாத நிலையில் உள்ளது.
இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக்கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்ககூடிய அரசியல் தீர்வை காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை இன்று நாட்டின் எல்லைகளை தாண்டி சர்வதேசத்தின் கூர்மையான பார்வைக்கு சென்றுள்ளது' என்றார்.
திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நடைபெற்ற இக்கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment