Translate

Saturday 7 July 2012

மக்களின் ஆணையைப் பெறுமா சர்வதேசப் பிரகடனம்?

மக்களின் ஆணையைப் பெறுமா சர்வதேசப் பிரகடனம்?
 
இதயச்சந்திரன்
 
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக்கடுமையான வீழ்ச்சியை இந்த வாரம் இலங்கையின் பங்குச் சந்தை எதிர்கொண்டுள்ளது. 
2011 நவம்பரிலிருந்து இற்றைவரை 17.5 சதவீதம் தனது ரூபாய் நாணயத்தின் பெறுமதியை இலங்கை இழந்துள்ளது.

இறக்குமதியாகும் அத்தியாவசிய எரிபொருளான மசகு எண்ணெய்க்கு செலுத்த வேண்டிய டொலர் நாணயப் பற்றாக்குறையால், அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து 500 மில்லியன் டொலர்களை கடன் வாங்க வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது பி.பீ.nஐயசுந்தராவின் திறைசேரி.
மகிந்தர் பெருமைப்டும் 7.2 சதவீத பொருளாதார வளர்ச்சி வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கொண்டு வர இயலாத நிலையில் ஊடகங்களில் சொல்லப்படும் சுயதம்பட்டங்கள் போலியானவை என்பதை தெரிந்து கொள்வது சுலபம்.
அத்தியாவசியப் பொருட்களின் செயற்கையான விலை அதிகரிப்பினால் நாட்டின் பணவீக்கம் கடந்த ஜுன் மாதத்தில் என்றுமில்லாதவாறு உச்சத்தைத் தொட்டுள்ளது. 
பணவீக்கத்திற்கு ஏற்றவாறு தமது சம்பளத்தை உயர்த்துமாறு தொழிலாளர்கள் போராட ஆரம்பித்துள்ளனர்.
தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட முடியாத நிலைபோன்று மத்திய வங்கிக்கும் திறைசேரிக்குமிடையே முறுகல் நிலை அதிகரிப்பதைக் காணலாம்.
வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்க முடியாத அளவிற்கு அதன் திரவப் பணம் வற்றிச் செல்கிறது.
அதனை நிவர்த்தி செய்ய ரூபாய் நாணயத்தை மேலதிகமாக அச்சடித்தால் பணவீக்கம் அதிகரிப்பதை தடுக்க முடியாமல் போய்விடும்.
இப்பிரச்சினையானது இலங்கையில் மட்டுமல்லாது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் விரிவடைவதைக் காணலாம். 
வங்கிகளுக்கிடையே நிகழும் பரிவர்த்தனையில் வட்டி வீதத்தில் ஏற்பட்ட லைபோர் [LIBOR] குளறுபடிகளால், பிரித்தானியாவின் மிகப்பெரிய வங்கியான பார்க்ளேயில் [Barclays] பெரும் நெருக்கடி ஏற்பட்டு அதன் தலைவர் பொப் டயமன்ட் பதவி விலகியுள்ளார்.
நிதிநெறியாள்கை அதிகார சபையின் கவனம், இவ்விவகாரத்தில் குவிவதால், மேலும் பல வங்கிகள் சிக்கல்களை எதிர்கொள்ளப் போவதைக் காணலாம்.
இலங்கையிலும் இத்தகைய நாணயப் பரிவர்த்தனை குளறுபடிகள் வெளியில் பெரிதாகக் தெரியாதளவிற்கு உருவாகிக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது.
ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதித் துறையில் மேலதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று பல தென்னிலங்கை பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டினாலும், இலங்கையின் பொருளாதாரத்தை சுற்றுலாப் பயணத்துறையை மையமாகக் கொண்டு உருவாக்க வேண்டுமென மகிந்த சிந்தனை அடம்பிடிப்பதைக் கவனிக்கலாம்.
நுவரெலியா உட்பட நாடெங்கும் உள்ளூர்; விமான நிலையங்களை நிர்மாணிப்பதும், சீன, இந்திய முதலீட்டில் அதிவேக விரைவுப் பாதைகளை அமைப்பதும், எயர்லங்கா, மிகின் லங்கா விமானச் சேவைகள் நட்டத்தில் இயங்கினாலும் மேலதிக பயணிகள் விமானங்களை வாடகைக்கு வாங்குவதும், மகிந்தருக்கு உல்லாசப் பயணத்துறைப் பொருளாதாரத்தில் இருக்கும் அதீத நம்பிக்கையையும், ஈடுபாட்டையும் காட்டுகிறது. 
இதேவேளை உல்லாசப் பயணத்துறையில் முதலீடு செய்வதற்கு பல ஆசிய நாடுகள் முண்டியடிப்பதைக் கவனிக்கலாம்.
அத்தோடு மேற்குலகு உட்பட பல வல்லரசுகள், திருமலைத் துறைமுகத்தில் கனரக தொழிற்சாலைகளை நிர்மாணிக்க கூட்டாகச் செயற்படும் செய்தியையும் பார்க்கலாம்.
~நல்லிணக்கம்~ என்கிற பாதை ஊடாக தமது முதலீடுகளை இலங்கைக்குள் கொண்டு செல்ல விரும்பும் அமெரிக்காவும், இந்தியாவும் வௌ;வேறான நகர்வுகளை மேற்கொள்கின்றன.
ஊடக அடக்குமறையைக் கண்டித்து அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அறிக்கை விடும் அதேவேளை முதலீடுகள் குறித்தான இணக்கப்பாட்டு அரசியலை முன்னகர்த்த அவை தவறவில்லை என்கிற செய்தியும் கவனிக்கத்தக்கது.
 
இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் ஐP.எஸ்.பி. சலுகையை மீளாய்வு செய்வதற்கு அதன் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களிற்கான வர்த்தகப் பிரதிநிதி மைக்கல் டெலேனி, கடந்த மாதம் 13ஆம் திகதி இலங்கை சென்றிருந்தார்;.
இம்மீளாய்வின் வெளிப்பாடாக, இச்சலுகையானது எதுவித மாற்றமுமின்றத் தொடரும் என்கிற வகையில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி றொன்கேர்க் அவர்கள் 29ஆம் திகதியன்று தெரிவித்த செய்தியினை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிச்சாத் பதியுதீன் வரவேற்றிருந்தார்.
ஆகவே இச்சலுகை நீடிக்குமா அல்லது நிறுத்தப்படுமாவென்று பதட்டத்தில் இருந்த அரசிற்கு, றொன் கேர்க்கின் ஆறுதல் செய்தி மகிழ்வைக் கொடுத்திருக்கும்.
இவை தவிர பியகமவில் அமைந்திருக்கும் கொக்ககோலா தொழிற்சாலைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட தூதுவர் பற்றீசியா ஏ.புரெனிஸ் பசுமைத்தரம் காண விரும்பியதாகவும் செய்திகள் வந்தன.
ஆகவே அமெரிக்க நகர்வுகள் யாவும், சீனாவின் முதலீட்டு மற்றும் கேந்திர நலன்களை இலங்கையில் எவ்வாறு மட்டுப்படுத்துவது என்கிற வகையில் அமைவதைக் காணலாம்.
இந்நிலையில் மனித உரிமை மீறல் என்கிற சர்வதேசப்பிரம்பை   உயர்த்தியவாறு, தனது நலனைச் சாதிக்க முனையும் அதேவேளை சிங்களத்தோடு குறைந்தபட்ச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நல்லிணக்கமொன்றினை எவ்வாறு ஏற்படுத்தலாமென்கிற அறிவுரைகளை கூட்டமைப்பிற்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் கூற அமெரிக்கா முற்படுவது போல் தெரிகிறது.
தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க திட்டங்களையும் அதன் அனுபவங்களையும் இலங்கைப் பிரச்சினையோடு பொருத்திப் பார்த்து, ஒரு விதமான சமரசத்தினை ஏற்படுத்தி விடலாமென சிலர் கற்பிதம் கொள்கிறார்கள்.
ஆனாலும் சீனா என்கிற ஆசியாவின் பெருஞ்சக்தியை தனது நிரந்தர நண்பனாக வைத்திருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாதம் காணி, காவல்துறை அதிகாரம் கொண்;ட மாகாணசபைத் தீர்வினைக் கூட தமிழ்பேசும் மக்களுக்கு வழங்கப்போவதில்லை என்பதை அவர்களின் அண்மைக்கால வாக்குமூலங்கள் உணர்த்துகின்றன.
இதில் வேடிக்கை என்னவென்றால், 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள காணி, காவல்துறை மற்றும் நிதி குறித்தான அதிகாரங்களின் தலைமையாளராக அதனைக் கட்டுப்படுத்தும் சக்தியாக 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக எல்லாம் வல்ல மகிந்த இராஐபக்சவே இருக்கிறார் என்பதை நல்லிணக்கம் பற்றி பேசும் புலம்பெயர் அமைப்புகளின் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே அமெரிக்காவை விட்டால் வேறு வழியென்ன? என்று அரசியல் மேதாவிகள் போல் கேள்வி எழுப்புபவர்கள் நிலத்திற்காக இன்னும் போராடும் தாயக மக்களிடமிருந்து இக்கேள்விக்கான பதிலைப் பெற்றுக் கொள்ளலாம்.
அண்மையில் நிகழ்ந்த தொலைக்காட்சி நேர்காணலொன்றில் உலகத் தமிழர் பேரவையானது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை மற்றும் கூட்டமைப்போடு பேசிக் கொண்டிருப்பதாகவும், அவர்களோடு பொதுக் கருத்தொன்று எட்டப்பட்டவுடன் சர்வதேச பிரகடனம் ஒன்று விரைவில் வெளியிடப்படுமென்று இமானுவல் அடிகளார் கூறியிருந்தார்.
இருப்பினும், முதற்படியாக அதிகாரமற்ற மாகாணசபையை ஏற்றுக்கொண்டு அமெரிக்க-இந்திய உதவியோடு மேலும் பல படிகளில் ஏறிச் செல்லலாம் என்கிற கதையாடல்களை விடுத்து, தாயக தமிழ் பேசும் மக்கள், தமிழ் நாட்டில் வாழும் இலட்சக் கணக்கான ஈழ ஏதிலிகள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் ஈழமக்கள் அனைவரையும் இணைத்து அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு என்ன என்பதற்கான பொதுஐன வாக்கெடுப்பு  நடாத்தப்பட வேண்டுமென்கிற சர்வதேச பிரகடனத்தை முன் வைத்தால் சிறப்பாக இருக்கும்.
புலம்பெயர் நாடுகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பில், மக்கள் அளித்த தீர்ப்பினை உலகத் தமிழர் பேரவை கருத்தில் கொள்ள வேண்டும்.
புலம் பெயர் அமைப்புக்கள் முன் வைக்கும் எந்த அரசியல் தீர்வும் மக்கள் ஆணையைப் பெற்றிருக்க வேண்டும் என்பதனை மறுதலிக்காமல் இவ்வமைப்புகள் செயற்படுதல் நன்று.
 
- இதயச்சந்திரன்

No comments:

Post a Comment