Translate

Saturday 7 July 2012

இலங்கை சிறையில் தமிழர் கொலை: வைகோ, சீமான் கண்டனம்


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

இலங்கை சிறையில் தமிழர் கொலை: வைகோ, சீமான் கண்டனம் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடைபெற்று வருகிறது. சிங்களப் போலீசாரும், ராணுவமும் தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டு, தமிழர் பூமி துன்புறுத்தும் வதைக்கூடம் ஆகிவிட்டது. இச்சூழலில் வவுனியா சிறைச்சாலையில் இருந்த தமிழர் கைதிகளை துன்புறுத்தி அனுராதபுரம் சிறைச் சாலைக்கு சிங்கள சிறைத்துறை அதிகாரிகளும், காவலர்களும் மாற்ற முயன்றதை தமிழர்கள் எதிர்த்ததால் அவர்களைப் படுமோசமாகத் தாக்கி அனுராதபுரம் சிறைச் சாலைக்குக் கொண்டு சென்று அங்கும் அவர்களை காட்டு மிராண்டித் தனமாகத் தாக்கி உள்ளனர். 


பின்னர் அங்கிருந்து அவர்களை மகர சிறைச்சாலைக்கு மாற்றி உள்ளனர். இந்த சிறைக் காவலர்களின் ஈவு இரக்கமற்ற தாக்குதலால் வவுனியா நெழுங்குளத்தைச் சேர்ந்த நிர்மல் ரூபன் என்ற ஈழத் தமிழர் உயிர் இழந்தார். இன்னொரு தமிழர் நினைவிழந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். 

மனித உரிமைகளை அடியோடு நாசம் செய்து சிறைச் சாலையில் அடைக்கப்பட்ட தமிழர்களை சித்ரவதை செய்கின்ற சிங்கள அரசின் கொடுமை மிகவும் அதிர்ச்சி ஊட்டுவதாகும். இப்படி துன்பத்தில் துடி துடிக்கும் ஈழத் தமிழர்களின் உயிருக்கு இன்றளவும் உத்தரவாதம் இல்லை. இத்தகைய கொடுமைகளைச் செய்யும் சிங்கள அரசுக்கு அனைத்து வகையிலும் இந்திய அரசு உதவி வருவது தமிழ் இனத்துக்கு இழைக்கப்படும் துரோக மாகும். 

சிறைச்சாலைகளில் சிங்களவரால் தாக்கப்பட்டு, பரி தவிக்கும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க, ஐ.நா.வின் பொதுச்செயலாளரும், மனித உரிமையைக் காக்கப் போராடும் அனைத்துலக அமைப்புகளும், நாடுகளும் முன்வர வேண்டும். சிங்கள ராஜபக்சே அரசுக்கு கண்டனமும் எச்சரிக்கையும் செய்ய வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது:- 

இலங்கையில் வன்னி முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சிலரை பணயக் கைதிகளாக பிடிக்க வந்த சிங்கள ராணுவத்தினரை எதிர்த்த தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

வன்னி முகாமில் இருந்து இரண்டு பேரை விசாரணை என்ற பெயரில் சிங்கள ராணுவம் பிடித்துச் சென்று அனுராதபுரம் சிறையில் அடைத்துள்ளது. இதனை எதிர்த்து வன்னி முகாமில் இருந்த தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஈடுபட்ட 3 பேரை பிடிக்க வந்த ராணுவத்தினரை மற்றவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். அவர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய சிங்கள ராணு வத்தினர் 185 பேரை பிடித்துச் சென்று அனுராதபுரம் கொண்டு சென்றுள்ளனர். அனுராதபுரம் சிறைக்கு கொண்டு சென்ற தமிழர்களை அங்கிருக்கும் சிறை கண்காணிப்பாளர் தனது காலில் விழுந்து வணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். 

அதனை எதிர்த்தவர்களை மண்வெட்டியை பயன்படுத்தும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த 185 பேர் மட்டு மின்றி அனுராதபுரம் சிறையில் ஏற்கனவே இருந்த 35 அரசியல் கைதிகள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 22 அரசியல் கைதிகள் பலத்த காயமுற்றுள்ளனர். அவர்களை அங்கிருந்து கொழும்புவிலுள்ள மகர சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். காயம்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தால் தலையில் கடுமையாக தாக்கப்பட்ட ஒரு கைதி உயிரிழந்துள்ளார். மற்றொரு கைதி உணர்வற்ற நிலையில் உள்ளார். காயமுற்ற கைதிகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சென்று பார்த்துள்ளார். 

இங்கிருந்து செல்லும் இந்திய அரசின் பிரதிநிதிகள் இதுபற்றியெல்லாம் எந்தக் கேள்வியையும் எழுப்பாமல், இலங்கை எங்களது நட்பு நாடு என்று தொடர்ந்து பிரகடனம் செய்வதில் மட்டுமே கவனமாக இருக்கின்றனர். 

இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம் என்று கூறும் மத்திய அரசு, தமிழர்களுக்கு இழைத்து வரும் கொடுமைகளையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்து வருவதே இன்றளவும் தொடரும் இந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமாகும். 

இந்திய அரசு தங்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை சிங்கள இனவாத அரசிடம் இருந்து பெற்றுத் தரும் என்று இன்னமும் நம்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இதற்கு மேலாவது யதார்த்த நிலையை உணர்ந்து தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை சர்வதேச அளவில் முன்னெடுக்க வேண்டும். 

No comments:

Post a Comment