Translate

Thursday 5 July 2012

இலங்கை ஜனாதிபதி மகிந்த உண்மையுள்ளவராக இருந்தால் போர் முடிந்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழர் பிரச்சனையை தீர்த்து வைத்திருக்க முடிந்திருக்கும். "த ஐலன்ட்" பத்திரிகைக்கு சுரேந்திரன் வழங்கிய பேட்டி.


கொழும்பு "த ஐலன்ட்" பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் உலகத் தமிழர் பேரவை முக்கியஸ்த்தர் சுரேந்திரன் தெரிவிப்பு.
"இலங்கை ஜனாதிபதி உண்மையானவராக உள்ளார் என நான் நம்பவில்லை. அவரின் செயல்களே இதற்கு ஆதாரம். அவருக்கு அரசியல் விருப்பும் துணிச்சலும் இருந்திருந்தால் ஏறக்குறைய நூறு சதவீத சிங்கள மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவரும் 'நன்மதிப்புடையவரும்' நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ளவருமான மகிந்த இராஜபக்ச போன்ற ஒரு ஜனாதிபதியால் தமிழ் அரசியற் பிரச்சினையை போர் முடிந்த இந்த மூன்று ஆண்டு காலத்திலாவது மிக இலகுவாகத் தீர்த்து வைத்திருக்க முடியும்."
இவ்வாறு கடந்த 14-03-2012 அன்று வெளியான கொழும்பு "த ஐலன்ட்" பத்திரிகைக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் பிரித்தானிய தமிழர் பேரவையினதும் உலகத் தமிழர் பேரவையினதும் முக்கிய செயற்பாட்டாளரான திரு சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கடந்த பல வருடங்களாக வாழ்ந்து வரும் இவர் உலகின் பல நாடுகளுக்;கும் விஜயம் செய்து தமிழ் மக்கள்pன் பிரச்சனைகள் தொடர்பாக விவாதித்தும் கலந்துரையாடியும் வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆவர் வழங்கிய பேட்டியின் முக்;கிய பகுதிகள் பின்வருமாறு அமைந்துள்ளது
(கே) இலங்கை-இந்திய சமாதான ஒப்பந்தம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
(ப) இலங்கை வரலாற்றின் ஒரு பகுதி.
(கே) சூலை 1989இல் இலங்கை-இந்திய சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது நீங்கள் எங்கிருந்தீர்கள்? அப்போது உங்கள் வயது என்ன?
(ப) நான் ஐக்கிய இராச்சியத்தில் இருந்தேன். அப்போது என் வயது 25.
(கே) உ.த.பேரவைக்கும் பி.த. பேரவைக்குமிடையேயான தொடர்பு என்ன? அவை எப்போது உருவாக்கப்பட்டன?
(ப) உ.த. பேரவையானது உலகளாவிய அமைப்புக்களை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு. உ.த.பேரவையில் பிரித்தானியாவுக்காக அங்கம் வகிக்கும் அமைப்பாக பி.த. பேரவை உள்ளது. உ.த. பேரவை ஆகஸ்து 2009 இலும் பி.த. பேரவை 2006 இலும் உருவாக்கப்பட்டன.
(கே) தனது அரசியல் வருங்காலத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாது முன்னைய பிரதம மந்திரியான ரணில் விக்கிரமசிங்கா விடுதலைப் புலிகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த உண்மையோடு முயற்ச்சித்தார். நோர்வே அரசின் அனுசரணையோடு பெப்பிரவரி 2002இல் விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அவர் நிறைவேற்றினார். இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் யப்பான் ஆகிய நாடுகளின் ஆதரவு இருந்தது. ஏப்பிரல் 2003இல் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேறியதால் சனாதிபதி சந்திரிகா நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் புதிய தேர்தலுக்கு ஆணைபிறப்பிக்கவும் விடுதலைப் புலிகள் வழிவகுத்தனர். பேச்சு வார்த்தைகளிலிருந்து விலக வேண்டாமென விடுதலைப் புலிகளை வற்புறுத்தும் வகையில்; குறைந்தது ஓர் அறிக்கையையாவது விடப் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏன் தவறினர்?
(ப) எனக்குத் தெரிந்த வரையில் அந்நேரத்தில் புலம்பெயர்ந்த தமிழரின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்கள் எதுவும் இருக்கவில்லை. சந்திரிகா நாடாளுமன்றத்தைக் கலைத்ததற்கான காரணங்களென நீங்கள் கூறுவது முற்றிலும் சரியானவையா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தமானது மகிந்தா இராஜபக்சாவால் ஒருதலைப்பட்சமாக சனவரி 2008இல் இரத்துச் செய்யப்பட்டதென்பது எனக்கு ஞாபகத்தில் நன்கு உள்ளது. ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் அது இரு பகுதியினராலும் மீறப்பட்டதெனச் சிறீலங்கா கண்காணிப்புக் குழு அறிவித்திருந்தது என்பதையும் நான் கூறவேண்டும்.
இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தை மேசைக்குத் திரும்புமாறு இரு சமூகங்களையும் சேர்ந்த பலர் இலங்கைக்குள் இருந்தும் வெளியேயிருந்தும் வற்புறுத்தினர் என்பதை நான் சந்தேகத்துக்கு இடமில்லாமல் அறிவேன். பேச்சுவார்த்தைகள் மூலம் உண்மையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமெனப் பலர் விரும்பிய போதும் ஒரு சிலர் இராணுவத் தீர்வை மட்டுமே வேண்டி அதற்காக முழுமூச்சுடன் பாடுபட்டனர்.
(கே) 2006இல் நோர்வேயின் அனுசரணையின் கீழ் விடுதலைப் புலிகளைச் சந்தித்துப் பேச ஜெனீவாவுக்கும் ஒஸ்லோவுக்கும் தனது பிரதிநிதிகளை சனாதிபதி இராசபக்சா மூன்று தடவைகள் அனுப்பியிருந்தார். ஆனால் விடுதலைப் புலிகள் அவர்களைச் சந்திக்க மறுத்தனர். தமது நோக்கங்களை இராணுவ முறையில் எய்தலாமென விடுதலைப் புலிகள் நம்பியிருந்த காலத்தில் அவர்களின் படையினரும் புலம் பெயர்ந்த தமிழர்களும் மரபுசார் இராணுவ மூலோபாயங்களை மேற்கொண்டனர். உ.த. பேரவையின் முன்னணி உறுப்பினரான நீங்களோ அல்லது வேறெவரோ போரை மீண்டும் தொடங்க வேண்டாமென விடுதலைப் புலிகளை வற்புறுத்த முயற்ச்சி எடுத்தீர்களா?
ஒருதலைப்பட்சமான வரலாற்றை விளக்கியுள்ளீர்கள் போலத் தெரிகின்றது. இக்கேள்விக்கான முன்னுரையிலுள்ள அனுமானங்கள் உங்கள் விருப்புக்கேற்றனவாகவும் முற்றாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாதனவாகவும் உள்ளன. நான் கூறியது போன்று உ.த. பேரவை போர் முடிவுற்ற பின்னரே 2009 இல் தோற்றுவிக்கப்பட்டது. முன்னைய கேள்விக்கான எனது பதிலில் கூறியது போன்று இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தை மேசைக்குத் திரும்புமாறு இரு சமூகங்களையும் சேர்ந்த பலர் இலங்கைக்குள் இருந்தும் வெளியேயிருந்தும் ஆலோசனை வழங்கி வந்துள்ளனர் என்பது எனக்குத் தெரியும்.
(கே) விடுதலைப் புலிகள் சனவரி 2009 இல் கிளிநொச்சியை விட்டுத் தப்பியோடும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களோ மேற்கத்தைய வல்லரசுகளோ பொறுப்புக்கூறல் பற்றிய பிரச்சினையை எழுப்பவேயில்லை. அத்தோல்வி ஏற்படும் வரை வல்லரசுகளும் ஊடகங்களில் ஒரு பகுதியினரும் விடுதலைப் புலிகள் சிறீலங்கா இராணுவத்தைச் சுற்றிவளைத்து அதன் போர்ப் பிரிவுகளை சிதறடிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் என உறுதியாகத் தெரிவித்து வந்துள்ளன. அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணை வேண்டுமென்று உ.த. பேரவை எப்போது முதல்முதலாகக் குரலெழுப்பியது?
(ப) மீண்டும் உங்கள் கேள்வியின் முன்னுரையில் ஊகங்களையும் பரந்துபட்ட கூற்றுக்களையும் கையாளுகின்றீர்கள். நான் முதலில் கூறியது போன்று உ.த. பேரவை போர் முடிவடைந்த பின்னர்தான் உருவானது.
அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானம் பற்றிய சட்டங்கள் ஜெனீவா மரபுகள் ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் ஆகியன வெளிப்படையாகவே மீறப்பட்டன. இம்மீறல்களுக்கு உதாரணங்களாக குடிமக்களையும் மருத்துவமனைகளையும் குறிவைத்தல் கொத்துக் குண்டுகள் கண்ணிவெடிகள் போன்ற தடைசெய்யப்பட்ட படைக்கலன்களை உபயோகித்தல் குடிமக்களுக்குரிய இலக்குகள் மீது கிளைமோர் தாக்குதல் போதியளவு உணவையும் மருந்துகளையும் வழங்காமை ஆகியன அமைகின்றன. அனைத்துலகச் சட்டங்களை மீறியமை போர்க் குற்றங்கள் மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகிய குற்றச்சாட்டுகள் பற்றி அனைத்துலக விசாரணை வேண்டுமெனப் போர் முடிவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே நாம்; குரல்கொடுத்து வந்துள்ளோம்.
போரின் போது இருபக்கத்தினரினதும் செயல்கள் பற்றிய பக்கச்சார்பற்ற அனைத்துலக விசாரணையை உ.த. பேரவை வேண்டுகின்றது. போர் முடிவுறுவதற்கு முன்னரும் பின்னரும் இனப்படுகொலைகள் நடந்துள்ளன என்ற குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன என்பதையும் கூற விரும்புகின்றேன். சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு அடுத்தடுத்த அரசுகளினதும் தலைவர்களினதும் செயல்கள் இக்குற்றச்சாட்டுகளுக்குச் சான்று வழங்கக்கூடுமா என்பதை வரலாறுதான் நிருபிக்கும்.
(கே) கொழும்புக்கு விரைந்து சென்று தாக்குதலை நிறுத்த ஜனாதிபதி இராஜபக்சாவை வற்புறுத்தும்படி உ.த. பேரவையும் பி.த. பேரவையும்; ஐக்கிய இராச்சியத்தின் முன்னைய வெளியுறவுச் செயலரான டேவிட் மில்லிபான்ட்டுக்கு ஏப்பிரல் 2009இல் அழுத்தம் கொடுத்தனவா? வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தான் தனது நேரத்தில 60 சதவீதத்தை இலங்கை விவகாரங்களிற் செலவிடுவதாக மில்லிபான்ட் இலண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் கூறியதாக ('விக்கி லீக்ஸ்') பதிவுள்ளது.
(ப) முதலில் நான் கூறியவாறு உ.த. பேரவை போரின் முடிவுக்குப் பின்னரே தோற்றுவிக்கப்பட்டது. எனினும் உங்கள் கேள்விக்கான விடை ஆம் என்பதாகும். 'போர்ச் சூனிய வலயம்' என்று சொல்லப்பட்ட பகுதிக்குள் அகப்பட்டிருந்த எம் அன்புக்குரியவர்களுக்காக பி.த. பேரவையின் சார்பிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் சார்பிலும் நாம் பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம். படுகொலைகள் பற்றியும் பாரிய அழிவுகள் பற்றியும் தொடர்ச்சியாகச் செய்திகளும் சான்றுகளும் வெளிவந்தவண்ணம் இருந்ததால் திரு. மில்லிபான்ட் அவர்களும் மற்றைய உலகத் தலைவர்களும் என்ன நடக்கின்தென்பதை அறிந்துகொள்ள அவர்களை வற்புறுத்துவதற்கு அதிக முயற்ச்சி தேவைப்படவில்லை. நாட்டில் போர்ப் பிரதேசத்துக்கு வெளியில் வாழ்ந்த சமூகங்களும் உள்நாட்டு ஊடகங்களும் நிகழ்வுகளைப் பக்கச்சார்பின்றி வெளிக்கொணராது மௌனம் சாதித்தமை வேதனைக்குரியது.
மில்லிபான்ட் சொன்னதையோ அல்லாததையோ வெளிப்படுத்தியதோடு சனாதிபதி இராசபக்சாவும் அவரின் சகோதரர்களும் போர்க் குற்றங்களுக்கும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்பானவர்கள் என்றும் 'விக்கி லீக்ஸ்' வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கே) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் சிறீலங்காவிற்கெதிரான ஒரு தீர்மானத்தை அமெரிக்கா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அமெரிக்கத் தீர்மானம் இந்தியா உட்பட 23 நாடுகளின் ஆதரவைப் பெற்றது. அதேவேளை உ.த. பேரவை பி.த.பேரவை நா.க.த.ஈ. அரசு ஆகியன 'ஜெனீவா நடவடிக்கையை' தீவிரமாக ஆதரித்தன. சிறீலங்கா அரசுக்குப் பெரும் அடியொன்றைக் கொடுத்துள்ள இத்தருணத்தில் தற்போதுள்ள நிலைமையை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றீர்கள்?
(ப) காலந்தான் பதில் கூற வேண்டுமென்பதே இக் கேள்விக்கான நேரடிப் பதில். ஆம் 23 வாக்களித்த நாடுகள் வெளிப்படையாகவே அத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. 40 நாடுகள் தீர்மானத்தைக் கூட்டாக முன்மொழிந்தன. தீர்மானத்திற்குச் சார்பாக வாக்களிக்காத நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்பது சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் 'தர்க்க வாதம்'. தீர்மானத்திற்குச் சார்பாக வாக்களிக்காத நாடுகள் தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்றும் வாதிடலாம் என்பதை அவர் மறந்துவிட்டார்.
இத்தீர்மானத்தை சிறீலங்கா அரசிற்கோ வேறு எவருக்குமோ கொடுத்த அடி என எடுத்துக் கொள்ளக்கூடாது. நீதியைத் தேடுதல் கடந்த நிகழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவருவதோடு சமூகங்களிடையே நிலையான மீளிணக்கத்தை உருவாக்குதல் இலங்கையிலுள்ள அனைவருக்கும் சிறந்ததோர் அரசாட்சியைக் கொண்டுவருதல் தீவிலுள்ள அனைத்துச் சமூகங்களுக்கும் செழிப்பான வாழ்வையும் நிலைத் தன்மையையும் உண்டாக்கும் பொருட்டு நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசியல் பேச்சு வார்த்தைகள் மூலம் ஒரு பாதையை அமைத்தல் ஆகியன பற்றியதாகவே இத் தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பத்தாயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டமைக்கு நீதி வழங்கும் பொருட்டும் இதுபோன்ற பாரதூரமான கொடுமைகளோ மனித மாண்புக்கும் மனிதாபிமானத்திற்கும் எதிரான கொடுஞ்செயல்களோ உலகின் எந்தப் பாகத்திலும் எந்தச் சமூகத்துக்கும் எதிராக இனிமேலும் நடைபெறாதென்பதை உறுதிப்படுத்தும் பொருட்டும் கிடைக்கக்கூடிய அனைத்துச் சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்துதல் பற்றியதே இத் தீர்மானம்.
இந்தத் தீர்மானம் நிச்சயமாகச் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல.
(கே) ஜெனீவா வாக்கானது சிறீலங்கா அரசின் தோல்வி எனக்காட்ட நீங்கள் முனைந்த போதிலும் அமெரிக்காவின் பலமான ஆதரவு இருந்தும் அதே 19ஆம் அமர்வின்போது இஸ்ரேல் (மொத்தத்தில் ஐந்து வெளிவேறான தீர்மானங்கள் வாக்கெடுப்புக்களில்) கடும் தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தது என்பதை நீங்கள் வசதியாக மறந்துவிட்டிPர்கள். பொறுப்புக்கூறும் விடயத்தில் நெருக்கடிக்குள்ளானது சிறீலங்கா அரசு மட்டுமல்ல என்பதைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் உணரத் தவறிவிட்டார்கள் என நீங்கள் நினைக்கவில்லையா? உங்களின் முக்கிய ஆதரவாளர்களான அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் பல்வேறு இடங்களிற் பாரிய கொடுமைகள் புரிந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன என்பதையும் கவனிக்கத் தவறிவிட்டிPர்கள்.
(ப) அரசுக்கோ வேறெவருக்கோ பெரும் அடி கொடுத்துள்ளோம் என்றோ அரசின் தோல்விக்காகச் செயற்பட்டோமென்றோ உ.த. பேரவை ஒரு போதும் உரிமை கோரவில்லை. நீதி வழங்கப்படும் போதுதான் நிலையான மீளிணக்கம் தீவில் சாத்தியமாகும் என்று நாம் தொடர்ந்து கூறிவந்துள்ளோம். ஒரு சிறிய புலம்பெயர்ந்த சமூக அமைப்பான எமக்கு எம்மையும் எம்மக்களையும் நேரடியாகப் பாதிக்கும் விடயங்கள் தவிரப் பிற உலக விவகாரங்களிலோ நீதியற்ற செயல்களிலோ காத்திரமான முறையிற் கவனம் செலுத்தப் போதிய வளமோ வல்லமையோ இல்லை.
(கே) யூ.என்.ஏச்.சி.ஆர். பேரவையின் அமர்வின் போதும் அதனை உடன் அடுத்தும் யூ.என் யூ.என்.ஏச்.சி.ஆர் ஆகியன மனித உரிமை மீறல்களுக்காக இந்தியாவையும் கண்டித்தன என்பதோடு அதன் தேசிய பாதுகாப்புச் சட்டம் உட்படப் பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக அகற்றுமாறும் அதனைக் கோரின என்பதை நீங்கள் அறிவீர்களா?
(ப) ஆம். ஆனால் நீங்கள் மேலே விபரித்த அளவிற்கு அறிந்திருக்கவில்லை.
(கே) 'டறுஸ்மன் அறிக்கையை' எடுத்துக்கொண்டால் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு எவ்வாறு செய்திகளையும் விண்ணப்பங்களையும் திரட்டியது என்பது பற்றியும் ஐக்கிய இராச்சியத் தயாரிப்புக்களான 'சிறீலங்காவின் கொலைக் களங்கள்' மற்றும் சிறீலங்காவின் கொலைக் களங்கள்: தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' ஆகியனவற்றை எவ்வாறு பெற்றது என்பது பற்றியும் 'த ஐலண்ட்' பத்திரிகை அண்மையில் வெளிப்படுத்தியது. ஆண்கள் பெண்கள் குழந்தைகளென ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டனரென உ.த. பேரவையும் பிற புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களும் குற்றஞ்சாட்டி வருகின்றன. 2009ஆம் ஆண்டு சனவரி தொட்டு மே மாதம்வரை நடத்தப்பட்ட கொலைகளுக்காக இலண்டனிலுள்ள சிறீலங்காப் பாதுகாப்புத் தூதுவரை நாடுகடத்தத் தவறியமைக்காக வெளிநாட்டுச் செயலாளரான விலியம் ஹேக் மீது கடந்த ஆண்டு குறைகூறிய ஒரு பிரத்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் 40,000 பொதுமக்களும் 60,000 புலிப் போராளிகளும் கொல்லப்பட்டனர் எனக் கூறியுள்ளார். இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. போரின் இறுதி வாரங்களில் 75,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' கூறியுள்ளனர். எத்தனை தமிழ்ப் பொதுமக்கள் போரில் இறந்தனர்? எத்தனை புலிப் போராளிகள் போரிடும் போது பலியாகினர்?
(ப) ஐக்கிய நாடுகளின் நிபுணர்களின் குழு அறிக்கை போன்ற நம்பகமான அறிக்கைகளிலிருந்தே என்னால் விடை கூறமுடியும். அவ்வறிக்கையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 40,000 பேர் போரின் இறுதி வாரங்களில் இறந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளதெனக் கூறப்பட்டுள்ளது. மேலும் மன்னார் பேராயர் இராயப்பு யோசேப் அவர்கள் 146,000 மக்கள் காணாமற் போயுள்ளனர் எனக் கற்றறிந்த பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக் குழுவிடம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீங்கள் சரியாக குறிப்பிட்டுள்ளது போன்று பல்வேறு மதிப்பீடுகளும் மேற்கோள்களும் நிலவுகின்றன. இந்தப் பிரச்சினையையும் இது சார்ந்த பிற பிரச்சினைகளையும் தெளிவு படுத்துவதற்குச் சிறந்த வழி பக்கச்சார்பற்ற அனைத்துலக விசாரணைக் குழுவை அமைத்தலேயாகும். சனாதிபதி இராசபக்சா அரசிடம் ஒழிப்பதற்கு எதுவும் இல்லையெனில் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரந்தரமாக அகற்றும் பொருட்டு இது போன்ற விசாரணைக் குழுவை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். இதுதான் என் ஆலோசனை.
(கே) 2006இன் நடுப் பகுதியில் போரின் ஆரம்ப கட்டத்தில் விடுதலைப் புலிகளின் போராளி எண்ணிக்கை என்ன என்று கூறமுடியுமா? எத்தனை பேர் உயிர் தப்பினர்?
(ப) எனக்குத் தெரியாது. மேலே கூறியது போன்ற விசாரணைக் குழு அமைக்கப்பட்டால் இதற்கும் நம்பகமான விடை காணலாம். (கே) விடுதலைப் புலிப் போராளிகளைப் பொதுவாழ்விற்கு மீளச் செல்லுமாறு அனைத்துலகக் குடிப்பெயர்வுக்கான அமைப்பினால் (ஐ.ஓ.எம்) நடத்தப்பட்டுவரும் செயல் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
(ப) ஆம். ஜெனீவாவில் மனித உரிமைகள் அமைப்புக் கட்டிட நடைபாதையில் நீங்கள் அதுபற்றி எனக்கு விளக்கிய பின்னர் அறிந்தேன். மார்ச் 2012 இல் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது சிறீலங்கா அரசு நடத்திய பக்க நிகழ்ச்சி ஒன்றில் நான் உங்களுக்குக் கூறியது போன்று காரணம் ஏதுமில்லாது அரசைக் குறைகூறுகின்ற அல்லது கண்டிக்கின்ற பணியில் உ.த. பேரவையின் சார்பில் நாம் ஈடுபடுவதில்லை. அரசும் பிறரும் எடுத்துள்ள முற்போக்கான முன்னகர்வுகளையும் திட்டங்களையும் நான் வரவேற்று அவற்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளேன் என்பது பதிவிலுள்ளது. துரதிஸ்டவசமாக இம் முன்னகர்வுகளும் திட்டங்களும் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.
(கே) இந்திய நாடாளுமன்றக் குழுவின் அண்மைய வருகை விடுதலைப் புலிகளுக்குப் பின்னான பிரச்சினைகளைத் தீர்க்க உதவுமென நீங்கள் நம்புகின்றீர்களா? இராசபக்ச ஆட்சியின் நேர்மையின்மையைக் காரணங்காட்டி தி.மு.கவும் அ.இ.அ.திமு.கவும் இக்குழுவிலிருந்து பின்வாங்கக் கடைசி நேரத்தில் எடுத்த தீர்மானத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?
(ப) விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்னமே இருந்த பிரச்சினைகளும் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளும் வேறுபட்டவையல்ல. இப்பிரச்சினைகள் இப்போது மேலும் மோசமடைந்துள்ளன என்பதே உண்மை. எனினும் இந்திய நாடாளுமன்றக் குழுவின் வருகை ஏதாவது விதத்தில் உதவுமென நான் நம்புகின்றேன். ஆம் தி.மு.கவினதும் அ.இ.அ.திமு.கவினதும் தீர்மானத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
(கே) பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு நாடாளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்க ஜனாதிபதி இராஜபக்ச எடுத்துவரும் முயற்ச்சிகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
(ப) இவை காலத்தை இழுத்தடிக்கும் தந்திரங்கள்.
நாடாளுமன்றக் கட்சிகளிடையே அரசியல் தீர்வுக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எய்தும் இதே நோக்கத்திற்காக பேராசிரியர் திஸ்ச வித்தாரணாவின் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவை சில ஆண்டுகளுக்கு முன் சனாதிபதி இராசபக்ச நியமித்திருந்தார். அதன் வியந்துரைகளை ஜனாதிபதி என்ன செய்தார் என்பதை அறிய நான் விரும்புகின்றேன்.
ஏறக்குறைய 100 சதவீத சிங்கள மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவரும் 'நன்மதிப்புடையவரும்' நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டவருமான மகிந்த இராஜபக்ச போன்ற ஒரு சனாதிபதியால் தமிழ் அரசியற் பிரச்சினையை போர் முடிந்த இந்த மூன்று ஆண்டு காலத்திலாவது அரசியல் விருப்பும் துணிச்சலும் இருந்திருந்தால் மிக இலகுவாகத் தீர்த்து வைத்திருக்க முடியும்.
(கே) கற்றறிந்த பாடங்கள் மற்றும் மீளிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தேசிய மீளிணக்கத்துக்கு உதவுமென நீங்கள் நம்புகின்றீர்களா?
(ப) நிச்சயமாக. முழுமையாக நிறைவேற்றப்பட்டால் மிகப்பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எனினும் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கெதிரான குற்றங்கள் ஆகிய குற்றச்சாட்டுகளும் பொறுப்புக்கூறல் சம்பந்தமான விடயங்களும் முழுமையாகப் பக்கச் சார்பற்ற முறையில் விசாரிக்கப்படும் வரை உண்மையானதும் நிலையானதுமான மீளிணக்கத்தை அடைய முடியாது. துரதிட்டவசமாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் மீளிணக்கம் பறறிய ஆணைக்குழுவின் அறிக்கை இந்த விடயங்களை நம்பகமான முறையில் அணுகவில்லை.
(கே) வெளிவரவுள்ள சில்கொற் விசாரணை அறிக்கை பற்றிய உங்கள் கருத்து?
(ப) எமக்கு அப்பாற்பட்ட விடயங்கள் பற்றி எம்மால் கருத்துக் கூறமுடியாது. எனினும்�� அடுத்த முறை உங்களைச் சந்திக்கும் போது (ஜெனீவாவிலாக இருக்கக்கூடும்) எனது தனிப்பட்ட கருத்துக்களை உங்களுக்குக் கூறுவேன்.
(கே) இலங்கையிலோ வெளிநாடுகளிலோ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்துள்ளதா? அன்ரன் பாலசிங்கம் அவுஸ்திரேலியாவிற் பிறந்த அவரது மனைவி அடேல் நோர்வேயின் சமாதான முயற்ச்சியோடு சம்பந்தப்பட்ட விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்கள் போன்றோரைச் சந்தித்துள்ளீர்களா?
(ப) ஆம். நான் விடுதலைப் புலி இயக்க உறுப்பினரைச் சந்தித்துள்ளேன். அன்ரன் பாலசிங்கத்தையோ அவரது மனைவியையோ நான் ஒருபோதும் சந்தித்ததில்லை. நோர்வேயின் சமாதான முயற்ச்சியோடு சம்பந்தப்பட்ட விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்களைச் சந்தித்துள்ளேன்.
(கே) 1990இன் இறுதியில் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லீம் மக்களை விடுதலைப் புலிகள் விரட்டிய நிகழ்விலிருந்து தனது செயல்களுக்கான ஊக்கத்தைப் பெற்றதாகப் பலரைக் கொலைசெய்த நோர்வீஜிய வெகுசனக் கொலைஞன் கூறியுள்ளான். விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் யூதர்கள் மீதான இதே போன்ற தாக்குதல்களுக்கு ஊக்கமளித்துள்ளன எனச் சிறீலங்காவின் முன்னைய இஸ்ரேலியத் தூதுவர் இதை எழுதுபவருக்குக் கூறியுள்ளார். அதே போன்று கோல் என்ற அமெரிக்க போர்க் கப்பலை ஏடனில் தாக்குவதற்கு கடற்புலிகளின் வழிமுறைகளை அல் கெயிடா அமைப்பு எவ்வாறு பின்பற்றியது என்பது பற்றிக் கடற்புலிகளின் தளபதி சூசை பி.பி.சீக்குக் கூறியமை பதியப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தமது இயக்கத்தை ஒத்த குழுக்களின் மீது உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா?
(ப) நீங்கள் மேலே கூறியவை உண்மையெனில் அப்படித்தான் நடந்துள்ளது போலத் தெரிகின்றது. எனினும்�� இந்த வேறுபட்ட மூவரினதும் தனிப்பட்ட கூற்றுக்களைக் கொண்டு நீங்கள் கூறியுள்ள பொதுப்படையான ஒரு முடிவுக்கு வரமுடியாது.
(கே) இலங்கையில் த.தே.கூட்டமைப்பு தமிழ்ப் பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? (டிசம்பர் 2001 நாடாளுமன்றத் தேர்தலை முன்னண்டிய காலத்தில் விடுதலைப் புலிகள்தான் தமிழ்ப் பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதைத் த.தே. கூட்டமைப்பு அங்கீகரித்து என்பதை மறந்துவிட வேண்டாம்).
(ப) த.தே. கூட்டமைப்புதான் கடந்த பொதுத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் பெரும்பான்மை வாக்குகளால் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்டதென்பதால் நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
(கே) 13ஆம் திருத்தமும் அதற்கு மேலும் என்பது சாத்தியமானதென்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
(ப) இந்தக் கேள்வியை நீங்கள் சனாதிபதி இராசபக்சாவிடமும் அவரது மந்திரி சபையிடமும் கேட்கவேண்டும். எனினும் சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாகப் பல ஆண்டுகள் இருந்துவரும் 13ஆவது திருத்தம் இதுவரை செயற்படுத்தப்படாமல் இருப்பது விந்தையல்லவா?
(கே) ஜனாதிபதி இராஜபக்ச அவரது முயற்ச்சிகளில் உண்மையானவராக உள்ளார் என நம்புகின்றீர்களா? அல்லது உங்கள் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றாரா?
(ப) ஜனாதிபதி இராஜபக்ச அவரது முயற்ச்சிகளில் உண்மையானவராக உள்ளார் என நான் நம்பவில்லை. அவரின் செயல்களே இதற்கு ஆதாரம். நான் முன்னர் சொன்னது போன்று அரசியல் விருப்பும் துணிச்சலும் இருந்திருந்தால் ஏறக்குறைய 100 சதவீத சிங்கள மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவரும் 'நன்மதிப்புடையவரும்' நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ளவருமான மகிந்த இராஜபக்ச போன்ற ஒரு ஜனாதிபதியால் தமிழ் அரசியற் பிரச்சினையை போர் முடிந்த இந்த மூன்று ஆண்டு காலத்திலாவது மிக இலகுவாகத் தீர்த்து வைத்திருக்க முடியும்.
தமிழரின் குறைகளைத் தீர்ப்பதற்குத் துணிகரமாதும் நியாயமானதுமான ஒரு நடவடிக்கையை எடுத்தால் அது�� சிங்கள மக்களின் வாக்குகளை மட்டுமே ஏறக்குறைய முற்றாகக்கொண்டுள்ள அவரது வாக்குத் தளம் அவருக்குத் தொடர்ந்து வாக்களிக்க மறுக்குமென அவர் பயப்படுகின்றார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.
போர்க் குற்றங்களும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களும் புரிந்துள்ளதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள ஜனாதிபதி இராஜபக்சா இராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் இருப்பதனால் மிகப்பெரும் இக்கட்டு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இக்குற்றச் சாட்டுகளுக்கான சான்றுகள் பெருகி வரும் நிலையில் தான் நாட்டின் தலைவர் பதவியை இழக்கும் நாளன்று லைபீரியாவின் சாள்ஸ் ரெயிலர் முன்னைய யுகோசிலாவியாவின் மிலொசொவிக் ஆகியோர் போன்று தானும் கைதுசெய்யப்படலாம் என்பதை அறிந்துள்ள அவர் அரசியல் தீர்வொன்றைப் பேச்சுவார்த்தை மூலமோ பேரம் பேசியோ எட்டி தனக்குக் கிடைக்கவுள்ள தீர்ப்பிலிருந்து தப்பிக்கொள்ள முயற்ச்சிக்கின்றார்.
போருக்குப் பின் இயல்பு நிலையை மீளக் கொண்டுவர பினவரும் 15 அம்சங்களும் உதவுமென உ.த. பேரவை நம்புகின்றது:
பயமின்றித் தமது கருத்துக்களைப் பேசவும் தம் பிள்ளைகளைப் பயமின்றி வளர்க்கவும் மக்கள் பழக்கப்பட வேண்டும்.
ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை வடக்கிலும் கிழக்கிலும் இருந்து அகற்ற வேண்டும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும்.
முறையான சட்ட நடைமுறைக்குப் புறம்பாகத் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களின் பெயர்களை அறிவித்து அவர்கள் சட்ட ஆலோசகர்களுடனும் குடும்பத்தினருடனும் மனிதவுரிமை அமைப்புக்களுடனும் தொடர்புகொள்ள அனுமதிக்க வேண்டும்.
நாட்டின் சட்டங்களின்படி அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
மக்கள் தங்கள் காணிகளையும் வீடுகளையும் மீளப்பெற வேண்டும். மேலும் அவர்கள் தம் சொந்த இடங்களிற் குடியமர்த்தப்பட வேண்டும்.
மிதமிஞ்சிய அரச தலையீடும் ஊழலும் இல்லாதவாறு கட்டமைக்கப்பட்டதும் போதிய நிதி வழங்கப்பட்டதுமான மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியமர்த்தல் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
போரினாற் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள்கட்டுமானப் பணிகள் செயற்படுத்தப்பட வேண்டும்.
இலங்கைத் தீவின் வௌ;வேறு பகுதிகளுக்கிடையே அபிவிருத்தியில் நிலவும் வேறுபாடுகள் குறைக்கப்பட்டு கல்வி சுகாதாரம் தொழில் வாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகள் முன்னுரிமைத் தேவைகளாகக் கருதப்பட்டு ஊழலற்ற முறையில் அவை கையாளப்பட வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் எமது மக்களுக்குச் செய்யப்பட்ட தீங்குகள் அனைத்துக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும்.
போரில் ஈடுபட்ட இரண்டு பகுதியினர் மீதும் சாட்டப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனிதத்துக்கெதிரான குற்றங்கள் ஆகியன பக்கச் சார்பற்ற அனைத்துலக விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட வேண்டும்.
அழுத்தங்கள் அதிகரிக்கும் போது இராசபக்ச அரசு வழமையாகக் கையாளுகின்ற அரசியல் நடைமுறைகளைப் போலல்லாது (உதா. அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு த.தே. கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் தற்போதைய நாடாளுமன்றத் தெரிவுக் குழு போன்றவை) நீண்ட காலமாக நீடித்து வருகின்ற தமிழ் மக்களின் நியாயமான குறைகளுக்கும் எல்லா மக்களின் குறைகளுக்கும் நிலையான அரசியல் தீர்வொன்றை எட்டும் பொருட்டு நம்பகம் வாய்ந்த உண்மையான அரசியல் செயல்முறைகளை அனைத்துலக உதவியுடன் தொடங்க வேண்டும்.
நட்புடன் நல்ல அயலவராக மக்கள் வாழும் பொருட்டு நீண்ட காலம் நிலைக்கக்கூடிய மீளிணக்கத்திற்கு அடிக்கல் நாட்டும் முயற்சியாக மேற்கூறிய அனைத்தும் இருக்க வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக அரசாங்கத்திலும் இராணுவத்திலும் பணியாற்றிய ஒரு சிலரின் மாபெருந் தவறுகளுக்காகவும் தவறான செயல்களுக்காகவும் சிங்கள மக்கள் சமூக வெறுப்புக்குரியவர்கள் என்பது போன்று உணரவேண்டியதில்லை.

No comments:

Post a Comment