Translate

Saturday 7 July 2012

SP யின் காலில் விழுந்து அவரின் சப்பாத்தை நக்குமாறு கூறிய அதிகாரிகள் !

வவுனியா சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது அதிஉச்ச சித்தரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்கள் மிகக் கொடுரமாக தாக்கப்பட்ட பின்னரே வைத்தியசாலையில் காலம்தாழ்த்தி அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் உள்ளே என்ன நடந்தது என்பது குறித்த சில செய்திகளை naam veLiyidukiRoom.


வவுனியா சிறைக்குள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை அதிரடிப்படையினர் வீசினர். இதன்பின்னர் சிறைச்சாலைக்குள் புகுந்த 15 முதல் 23 வரையிலான அரசாங்க பாதுகாப்புத் தரப்பின் குண்டர்கள் மயங்கிய நிலையில் சிறைக் கைதிகளைக் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்து வாகனங்களில் தூக்கி போடப்பட்ட கைதிகள் பிற்பகல் 1 மணியளவில் அனுராதபுரத்திற்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு இரவு 11 மணிவரை இடைவிடாது தாக்கப்பட்டனர். அங்கு குடிபோதையில் இருந்த சிறைக்காவலர்களும் காவற்துறையினரும் சிறைச்சாலை சுப்ரின்டனின் கால் சப்பாத்தை நக்குமாறு தொடர்ச்சியாக தாக்கியுள்ளனர். ஒவ்வொருவராக காலில் விழுந்து கும்பிட்டு சப்பாத்தை நக்கிய பின்னும் தாக்கப்பட்டுள்ளார்கள்.

இதன் தொடர்ச்சியாக கடுமையான கிரிமினல் குற்றவாளிகளை கொண்டு வந்து அரசியல் கைதிகளின் முகங்களில் காறித் துப்புமாறு பணிக்கப்பட்டு மாறி மாறி கிரிமினல் கைதிகள் தமிழ் கைதிகளின் முகங்களில் துப்பியதோடு களைக்கும் வரை அடிக்கும்படி பணிக்கப்பட்டு உள்ளார்கள். அனைத்து கைதிகளையும் காலை நீட்டச் சொல்லி முழங்காலுக்கும் பாதத்திற்கும் இடையில் கடுமையாக தாக்கியதில் முழங்காலுக்கு கீழ் அனைவருக்கும் கட்டு போடப்பட்டுள்ளது. அனைவருக்கும் உடலின் உட்காயங்கள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதி ஒருவரின் முதுகில் வட்டமாக பெரிய காயம் ஒன்று உள்ளது இதற்கு காரணம் பிஸ்ரலால் அவர் சுடப்பட்டதாக தெரியவருகிறது.

அனைத்து கைதிகளினதும் விலா எழும்பு முறிக்கப்பட்டுள்ளது. அனைவரதும் உடுப்புகள் அனுராதபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாற்று உடுப்புகள் இல்லை. ரத்தக்காயங்களுடன் 3 நாட்கள் மாற்றுடையின்றி விடப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் கைதான நிலையில் இப்போ அடித்துக் கொல்லப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த நிமல ரூபனின் கால்கள் நடுவால் கிளிக்கப்பட்டுள்ளது. இறப்பதற்கு முதல்நாள் இரவு உடலின் கண்டல் காயங்களில் இருந்து நீர் வழிந்தோடியிருக்கிறது. தான் இறக்கப் போவதாக இரவு முழுவதும் வேதனையால் துடித்துள்ளார். கால்களுக்கு இடையில் மரக் கட்டைகள் வைக்கப்பட்டு கால் கிளிக்கப்பட்டதால் இடுப்பு பகுதி பலமான சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் உள்ள மற்றும் ஒரு கைதியின் மண்டைப் பகுதி கடுமையாக தாக்கப்பட்டதனால் அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இவரது உயிரை காப்பது மிகவும் கடினம் என அனுராதபுரத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. றாகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ள நால்வரில் ஒருவர் கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தப் போராட்டத்தில் முன்னின்றவர்கள் என அரச பாதுகாப்பு குண்டர்களால் அடையாளம் காணப்பட்ட மூவரே போகம்பர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு அவர்கள் மிகக் கொடூர சித்திரவதைகளை எதிர் கொள்வதாகவும் சிறைச்சாலை அதிகார மட்டத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதிகள் அனைவரது உடல்களிலும் செயின் மற்றும் சவுக்கு போன்ற பார்களால் அடிக்கப்பட்ட தழும்புகள் ரத்தக் காயங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் இனி தம்மை அனுராதபுரத்திற்கு மாற்ற வேண்டாம் என்றும் மகரவிலேயே தாம் செத்து விடுகிறோம் எனவும் கைதிகள் அலறுகின்றனர். வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு ஏற்றிய போது அனைவரையும் அடித்தே கொல்லப் போகிறோம் எனக் கூறி இலங்கை அரசாங்க பாதுகாப்பு தரப்பின் குண்டர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் தமது உயிர்களைக் காப்பாற்றுமாறும் அல்லது மகர சிறையிலேயே சமாதி ஆக்குமாறும் கைதிகள் கோரி உள்ளனர்.

கடுமையான உயிர் பிரியக் கூடிய ஆபத்தான காயங்களுடன் இருக்கும் அவர்களுக்கு உரிய உடன் வைத்திய சிகிச்சைகள் அளிக்காவிடின் ஏனையவர்களும் கொல்லப்படும் நிலை காணப்படுவதாக சிறைச்சாலைகளோடு தொடர்புடைய மனிதாபிமானம் மிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உடனடியாகவே மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச சமூகம் தலையிட்டு இவர்களை உரிய சிகிச்சைக்கு வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பாதுகாப்பு செயலாளரும் இலங்கையின் நிஜ எஜமானுமான கோத்தாபய ராஜபக்ஸவுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment