Translate

Saturday 15 September 2012

சர்வதேச ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க போகும் சிறிலங்கா - எச்சரிக்கும் அமெரிக்கா

சர்வதேச ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க போகும் சிறிலங்கா - எச்சரிக்கும் அமெரிக்கா
 

பொறுப்பு கூறும் கடப்பாட்டிலிருந்து சிறிலங்கா விலகிச் சென்றால் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என அமெரிக்கா முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்காவின் இந்தக் கருத்தை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச்சர் றொபேட் ஓ பிளேக் வெளிப்படுத்தியுள்ளார். அங்கு அவர் தெரிவித்ததாவது,


சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்துள்ளபடி பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகி சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இதே கொள்கையில் சென்று கொண்டிருந்தால் அடுத்த வருட முற்பகுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என அமெரிக்கா முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

மீள்குடியேற்றம், தேசிய நல்லிணக்கம் மற்றும் நிரந்தர அமைதித் தீர்வொன்றை ஏற்படுத்துவதில் சிறிலங்கா அரசு அக்கறையின்றி இருப்பதாகவும், இதனால் தமிழ் மக்கள் மிகவும் நம்பிக்கையிழந்து விரக்தியான நிலைக்குச் சென்றிருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், பேச்சுவார்த்தை மேசையில் அமர கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற போதிலும், அரசாங்கத்திற்கு அதில் போதிய ஆர்வமில்லாமல் இருப்பதை அவர்களின் செயற்பாடுகளிலிருந்து அறியமுடிவதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ரொபர்ட் ஓ பிளேக், இலங்கையின் மனித உரிமை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் அமைதி முயற்சிகள் பற்றியும் அமெரிக்கா உன்னிப்புடன் அவதானித்து வருவதாகவும், இந்த நிலைமை தொடருமாயின் அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படுமென்றும் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பு ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச்சரை கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் சந்தித்து உரையாடினர். சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிஸெனும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment