Translate

Tuesday 25 September 2012

சர்வதேச அழுத்தங்களிலிருந்து மகிந்தவை காப்பாற்ற சம்பந்தன் முற்படுகிறார்- சுரேஷ் பிரேமச்சந்திரன்


சர்வதேச அழுத்தங்களிலிருந்து மகிந்தவை காப்பாற்ற சம்பந்தன் முற்படுகிறார்- சுரேஷ் பிரேமச்சந்திரன்


SAM_5262 சர்வதேச அழுத்தங்களிலிருந்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவையும் அவரது அரசையும் காப்பாற்றுவதற்காகவே சம்பந்தன் தனியாக மகிந்த ராசபக்சவை சந்தித்து வருகிறார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி இந்தியாவிற்குப் போகுமுன்பும், ஜெனிவா மகாநாட்டிற்கு முன்பாகவும் திரு.சம்பந்தன் அவர்களுடன் பேச அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பாக தனக்கு வரும் அழுத்தங்களைக் குறைத்துக்கொள்வதற்காகவே இச்சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வந்தார்.
திரு.சம்பந்தன் அவர்களும் இச்சந்திப்புக்களின் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மையும் கிட்டப்போவதில்லை என்பதைத் தெரிந்துகொண்டும் இச்சந்திப்புக்களின் மூலம் இலங்கை அரசாங்கம் தனக்கு வரும் வெளிநாட்டு அழுத்தங்களைக் குறைக்கவே முயற்சிக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டும் சம்பந்தன் அவர்கள் இப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்.

இந்தத் தொடர் சந்திப்புக்கள் கூட தனிப்பட்ட சந்திப்புக்களாகவும் கூட்டமைப்புடன் கலந்துரையாடாத சந்திப்புக்களாகவுமே இருந்து வந்துள்ளன.
இவ்வாறான நிலையில் கூட்டமைப்பிற்கு மக்கள் கொடுத்த ஆணையை யார் சிதைத்து வருகின்றார்கள்? சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியா? அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள வேறு யாருமா? என்பதனை மக்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றோம்; என சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராசபக்ச அண்மையில் இந்தியாவுக்கு செல்வதற்கு முதல் சம்பந்தனை தனியாக அழைத்து பேசினார். மகிந்த ராசபக்சவை சந்திப்பதற்கு முதல் சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசவும் இல்லை. அதுபற்றி தெரியப்படுத்தவும் இல்லை. இரகசியமாகவே இச்சந்திப்பு நடைபெற்றது.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் முழு விபரம்
‘கூட்டமைப்பைச் சிதைக்கும் ஆணையை தமிழர்கள் யாருக்கும் வழங்கவில்லை’ என தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்கள் வவுனியாவில் கடந்த 22.09.2012 அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேற்கண்ட கருத்தை யாரை நோக்கி திரு.சம்பந்தன் அவர்கள் வைக்கின்றார் என்பதை அவர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
கூட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கையை தமிழரசுக் கட்சியும் அதனை வழிநடாத்தும் தலைவர்களும்தான் மேற்கொண்டுவருகின்றனர் என்பது இன்று உலகறிந்த உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பதிவு செய்த கட்சியாக மாற்றிக்கொள்வதை தமிழரசுக் கட்சியே கடந்த மூன்றாண்டுகளாகத் தடைசெய்து வருகின்றது என்பது எல்லோரும் அறிந்ததே.
கூட்டமைப்பை யாரோ சிதைக்கப்போவதாக திரு.சம்பந்தன் அவர்கள் கூறுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைத் தவிர கூட்டமைப்பிற்கு என்ன வடிவம் இருக்கின்றது? அதற்கென்று ஒரு செயலாளர், பொருளாளர் என யாராவது இருக்கின்றார்களா? முடிவுகளை எடுப்பதற்கு வல்லமை கொண்ட கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளை உள்ளடக்கிய உயர்மட்டக்குழு ஏதாவது இருக்கின்றதா? கீழிருந்து மேல்வரை தலைமையுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய வகையில் கிராமிய நகர மட்டக்கிளைகள் ஏதாவது இருக்கின்றதா? 2001ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் இவ்வமைப்பிற்கு குறைந்த பட்சம் நிதிக்குழுவென்று ஏதாவது இருக்கின்றதா? இவை எதுவுமே இல்லையென்பதுதான் நிதர்சனமான உண்மை. இவையனைத்தையும் உருவாக்கத் தடையாக இருப்பது தமிழரசுக் கட்சியும் அதன் தலைமையுமே என்பது அக்கட்சியின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்களுக்குத் தெரியும். நிலைமை இவ்வாறிருக்க கூட்டமைப்பை வேறுயாரோ சிதைக்க முற்படுவதாக அறிக்கை வெளியிடுவதானது மக்கள் மத்தியில் பிழையான ஒரு கருத்தை உருவாக்கும் முயற்சி என்றே எண்ணத் தோன்றுகின்றது.
2001ஆம் ஆண்டு கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலம் முதல் இதனைப் பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியாக இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென பலபேர் கோரி வந்ததையும் திரு.சம்பந்தன் அவர்கள் அறிவார்கள். விடுதலைப் புலிகளின் ஆதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னர், இதன் தேவை இன்னும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதையும் அவர் அறிவார். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு வடிவத்தைக் கொடுக்க அதனைப் பதிவு செய்ய தமிழரசுக் கட்சி தயாரில்லை என்பதை அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தபொழுது இருந்த களநிலைமை என்பது வேறு. விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் பலமாக இருந்தனர். பேரம் பேசும் ஆற்றல் உள்ளவர்களாக இருந்தார்கள். புலிகளுடனேயே பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என்பதை கூட்டமைப்பும் தெளிவாகக் கூறியிருந்தது. ஆனால் 2009ஆம் ஆண்டின் பின்னர் உள்ள கள நிலைமை என்பது வித்தியாசமானது. தமிழ் மக்களின் ஒற்றுமை என்பதைத் தவிர, வேறுபலம் எதுவும் எமக்கிருக்கவில்லை. எனவே, அந்த ஒற்றுமை என்ற பலத்தைத் தக்கவைத்துக்கொள்ள நாம் அனைவரும் விரும்பினோம். ஆனால் தமிழரசுக் கட்சி மாத்திரம் தனிவழி செல்ல விரும்பியது. இன்றும் தனிவழிதான் செல்கின்றார்கள்.
விடுதலைப் புலிகள் ஆயுதரீதியில் மௌனிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தேவைகளுக்காகவும், பேச்சுவார்த்தையின் தேவைக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர் பயன்படுத்தப்படுகின்றதே தவிர, நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல், கூட்டமைப்பிற்கு ஒரு சரியான யாப்போ, அன்றி அதற்கான ஒருவடிவமோ இதுவரை இல்லை. அது மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு பொதுச்சின்னமோ கொடியோ எதுவும் கிடையாது. மாறாக, தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் பாவிக்கப்பட வேண்டுமென அக்கட்சியின் தலைமை நிர்ப்பந்திக்கின்றது.
அண்மைய கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு முன்னர் கட்சிகள், இயக்கங்கள் என்ற அடிப்படையை விட்டு, சரியான காத்திரமான வேட்பாளர்களை நியமிக்க வேண்டுமென்றும் அதற்காக ஒரு வேட்பாளர் தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டுமென்றும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் கோரியிருந்தன. ஆனால் திரு.சம்பந்தனாலும் மாவை சேனாதிராஜாவினாலும் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 13 வேட்பாளர்களை நியமிக்க வேண்டிய திருமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 10 இடங்களும், ஏனைய நான்கு கட்சிகளுக்கு 3 இடங்களும் கொடுக்கப்பட்டது. 14 வேட்பாளர்களை நியமிக்க வேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 9 இடங்களும் ஏனைய நான்கு கட்சிகளுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டது. அதேபோன்றுதான் அம்பாறை மாவட்டத்திலும் நடைபெற்றது.
இவ்வாறான ஒரு சர்வாதிகார தேர்தல் கூட்டைத்தான் திரு.சம்பந்தன் விரும்புகிறார்போல் தெரிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமல் இருப்பதன் மூலம் திரு.சம்பந்தன் அவர்கள் பேசுவதையும் செய்வதையும் ஏனையோர் கேட்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தமிழரசுக் கட்சி விரும்புகின்றது.
திரு.சம்பந்தரைப் பொறுத்தவரையில், அரசியல் முடிவுகளை எடுக்கும்பொழுது ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசுவதென்ற நிலை அவரிடம் இருந்ததில்லை. ஜெனிவா மாநாட்டிற்கு முன்பாக நாங்கள் ஜெனிவாவிற்குச் சென்று தமிழ் மக்களின் பிரச்சினையை விளக்குவோம் என்று உலகம் முழுவதிற்கும் அறிவிப்பார். ஆனால் பின்பு தான் தனித்துவமாக ஒரு முடிவெடுத்து ஜெனிவாவிற்குப் போவதில்லை எனவும் அறிவிப்பார். அதனை நியாயப்படுத்த உப்புச் சப்பற்ற காரணங்களையும் புதிதுபுதிதாகக் கண்டுபிடிப்பார்.
யாழ்ப்பாணத்தில் இலங்கையின் தேசியக்கொடியான சிங்கக்கொடியை உயர்த்திப்பிடிப்பார். ஆனால், இது தவறென்று முன்னர் தமிழரசுக் கட்சி கூறியதென நாம் எடுத்துச் சொன்னால் ஆண்டாண்டு காலமாக இதனை நான் ஏற்றிவருகின்றேன் என்று அதனையும் நியாயப்படுத்துவார். அதுமட்டுமன்றி, நான் சரியென்ற அடிப்படையிலேயே அந்தக் கொடியை உயர்த்திப்பிடித்தேன் இதற்காக யாரும் மன்னிப்புக்கோரத் தேவையில்லை என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறுவார். பல சமயங்களில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்குப் போகுமுன்பும், ஜெனிவா மகாநாட்டிற்கு முன்பாகவும் திரு.சம்பந்தன் அவர்களுடன் பேச அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பாக தனக்கு வரும் அழுத்தங்களைக் குறைத்துக்கொள்வதற்காகவே இச்சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வந்தார். திரு.சம்பந்தன் அவர்களும் இச்சந்திப்புக்களின் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மையும் கிட்டப்போவதில்லை என்பதைத் தெரிந்துகொண்டும் இச்சந்திப்புக்களின் மூலம் இலங்கை அரசாங்கம் தனக்கு வரும் வெளிநாட்டு அழுத்தங்களைக் குறைக்கவே முயற்சிக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டும் திரு.சம்பந்தன் அவர்கள் இப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார். இந்தத் தொடர் சந்திப்புக்கள் கூட தனிப்பட்ட சந்திப்புக்களாகவும் கூட்டமைப்புடன் கலந்துரையாடாத சந்திப்புக்களாகவுமே இருந்து வந்துள்ளன.
இவ்வாறான நிலையில் கூட்டமைப்பிற்கு மக்கள் கொடுத்த ஆணையை யார் சிதைத்து வருகின்றார்கள்? திரு.சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியா? அல்லது கூட்டமைப்பில் உள்ள வேறு யாருமா? என்பதனை மக்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றோம்;.
கூட்டமைப்பைப் பற்றிப் பேசும் திரு.சம்பந்தன் அவர்கள் கூட்டமைப்பு வலிமை பெற வேண்டுமென்றும், கொள்கைரீதியாக ஒன்றுபடக்கூடிய ஏனைய கட்சிகளும் கூட்டமைபபுடன் வந்து இணையலாம் என்றும் அதுதொடர்பில் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறுகின்றார். அதேசமயம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமது அடையாளங்களைப் பேணலாம் என்றும் ஆலோசனை கூறுகின்றார்.
மேற்கண்ட இரண்டு விடயங்களுமே ஒன்றுக்கொன்று முரணான விடயங்களாகும். கூட்டமைப்பு வலிமைபெற வேண்டுமானால் முதலாவதாக அது ஒழுங்கமைக்கப்பட்ட சகல அமைப்பு வடிவங்களையும்கொண்ட கட்சியாக மாற்றம் பெறவேண்டும். தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்கும் பாரிய பொறுப்பை தலையில் சுமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ளாவிட்டால் அதனால் விடுதலை இலக்கை அடைய முடியாமல் போய்விடும். கூட்டமைப்பு என்னும் கட்சிக்குள் கூட்டு முடிவுகள் எட்டப்பட வேண்டும். கட்சிக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அதற்கேற்ற பொறிமுறை கட்சியிடம் இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கினை அடைவதற்கான நிகழ்ச்சி நிரலும் அதற்கான வேலைத்திட்டமும் இருக்க வேண்டும். வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்றிட்டம் இருக்க வேண்டும். இது எதுவுமே இல்லாமல் வலிமையான தமிழத் தேசியக் கூட்டமைப்பைப் பற்றிப் பேசுவது பொதுமக்களை ஏமாற்ற உதவுமே தவிர, ஆக்கபூர்வமான செய்தியாக இருக்காது.
அதேசமயம் ஒவ்வொரு கட்சியும் தத்தமது அடையாளங்களைப் பேணவேண்டுமெனில், ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக தமக்கான அலுவலகங்கள், தமக்கான மகாநாடுகள், தமக்கான அமைப்புக்கள் எனச் செயற்பட வேண்டும். ஒவ்வொரு கட்சியும் கிராம மட்டங்களில் தமக்கான கட்சிக்கிளைகளை நிறுவ ஆரம்பித்தால் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை உருவாகுமா அல்லது இடைவெளி அதிகரிக்குமா? வயதில் மிகவும் மூத்த அரசியல்வாதி தமிழ் மக்களின் தலைவர் என்று சொல்லக்கூடியவர் எங்களுக்குத் தரும் ஆலோசனை இதுதான். தனித்துச் செயற்படுங்கள். உங்களது அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் வலுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முடியும். இவற்றையெல்லாம் நாம் யாரிடம் சொல்லி அழுவது? கட்சிகளென்று வந்தாலே ஒருவர்மீது ஒருவர் சேறுபூசுவதுதான் இயற்கை. ஐந்து கட்சிகளும் தனித்தனியாக இயங்க ஆரம்பித்தால் ஒருவர்மீது ஒருவர் சேறடிக்க முயற்சிப்பார்;களா அல்லது ஒற்றுமையுடன் செயற்படுவார்களா? திரு.சம்பந்தன் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கட்சிகள் தனித்தனியாக இயங்கலாம் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதற்காக? வெறுமனே வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவா? எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறுமனே தேர்தல் கூட்டல்ல. அது எமது மக்களின் விடுதலைக்கான ஒரு ஸ்தாபனம் என்றே நாமும் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பார்க்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட விலை கணக்கிட முடியாதது. அதற்காகப் பல தியாகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியொரு தமிழரசுக்கட்சியின் நலனுக்காக அவைகளைப் புறந்தள்ளிவிட முடியாது.
தமிழரசுக் கட்சியையோ, அல்லது வேறு எந்தக் கட்சிகளையுமோ அழித்துவிடும்படி நாம் கூறவில்லை. அவர்களது கட்சிகளை ஒருபுறம் வைத்துவிட்டு, இன்றைய தேவையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தும்படிக் கூறுகின்றோம்.
தீர்வு அண்மித்துவரும்பொழுது, கூட்டமைப்பைச் சிதைக்க இடமளித்தால் அதனால் அரசே இலாபம்பெறும் என்றும் அவர் கூறுகின்றார். திரு.சம்பந்தன் அவர்களின் கூற்று நூறுவீதம் உண்மையானது. கிழக்கு மாகாணத் தேர்தலில் தமிழரசுக் கட்சியால் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மிகக் கேவலமாக நடத்தப்பட்டபொழுதும், ஒற்றுமை கருதியும் தேர்தலின் வெற்றிகருதியும் ஒன்றாகச் செயற்பட்டோம். அவர்கள் தமிழரசுக் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தபொழுது நாம் கூட்டமைப்பிற்காகப் பிரச்சாரம் செய்தோம். மட்டக்களப்பில் எமக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஆசனங்களில் நான்கைக் கைப்பற்றியதன் மூலம் 80வீத ஆசனங்களைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை நிலைநாட்டினோம். திருமலை மாவட்டத்தில் வெற்றியீட்டியவர்களும் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லர். அவர்கள் மூவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்றே வெற்றியடைந்தார்கள். இவ்வாறே அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளனர். எனவே மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்களே தவிர, தமிழரசுக்கட்சிக்கல்ல என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கௌரவமாக நடாத்தப் பழகுங்கள்.
நாம் தமிழ் மக்களின் சுயமரியாதையை நிலைநாட்டவே போராட வந்தோம். அது எமக்குள்ளேயே இல்லாமல் போவது வருத்தத்திற்குரியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். தேர்தலில் வெல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வென்றபின் தமிழரசுக் கட்சி என்னும் போக்கினைக் கைவிடுங்கள். இவற்றை நீங்கள் செய்தால் கூட்டமைப்பும் சிதைந்துபோகாது, அரசும் இலாபம் ஈட்ட முடியாது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைப்பதில் தமிழரசுக் கட்சியினராகிய நீங்கள் முன்னணிப் பாத்திரத்தை விகிக்கின்றீர்கள். உங்கள் நடவடிக்கையின் மூலம் ஏனைய கட்சிகளை ஓரம் கட்ட முயற்சிக்கின்றீர்கள். இன்னும் சொல்லப்போனால் ஏனைய கட்சிகளுக்குள்ளும் பிளவை உருவாக்க முயற்சிக்கின்றீர்கள். இவை அனைத்திற்கும் நீங்கள் பொறுப்பாக இருந்துகொண்டு கட்சியை வேறு யாரோ சிதைக்க முயற்சிக்கிறார்கள் என்று சாரப்பட உங்கள் கட்சிக் கூட்டத்தில் பேசுவது அவர்களை ஏமாற்றுவதற்கே தவிர, வேறல்ல.
உங்கள்; உட்கட்சிப் பேச்சானது சகல ஊடகங்களிலும் வெளிவந்ததால், மக்கள் உண்மையை அறிய வேண்டி ஒருசில விடயங்களை இங்கு நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.
கூட்டமைப்பை வலுவாகவும் இறுக்கமாகவும் கொண்டுசெல்ல இன்னமும் காலம் கடந்துவிடவில்லை. அதற்கு வலுவான தலைமைத்துவம் தேவை. தமது கட்சியின் நலன்களை முன்னிலைப்படுத்துபவரால் அதனைச் சாதிக்க முடியாது.
வவுனியாவில் நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிலும், அண்மையில் நடைபெற்ற கிழக்குமாகாணசபைத் தேர்தல் பிரச்சார சமயங்களில் பொதுமக்களாலும், புலம்பெயர் சமூகத்தினராலும் கூட்டமைப்பை ஏன் பதிவுசெய்யவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இனியாவது காலம் தாழ்த்தாமல் கூட்டமைப்பைப் பதிவுசெய்வதற்கு ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
தமிழ் மக்கள் ஆணை தந்திருப்பது அரசியல் ரீதியாக குறைந்தபட்சம் ஒரு சமஷ்டி அரசை உருவாக்கவும், அதனை நடைமுறைப்படுத்த ஓர் வலுவான கூட்டமைப்பை உருவாக்குவதற்குமே. 2010ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே தமிழரசுக் கட்சியானது கட்சி அரசியலைப் புறந்தள்ளி மக்களின் நலனை முன்னிறுத்தி கூட்டமைப்பு சிதைந்துபோகுமளவிற்கு நெருக்கடிகளை உருவாக்காமல் புரிந்துணர்வுடனும் யதார்த்தத்தை விளங்கிக்கொண்டும் செயற்படுமாறும் வேண்டுகின்றோம்.
சுரேஷ் பிரேமச்சந்திரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும்

No comments:

Post a Comment