Translate

Monday 15 October 2012

தமிழர்களுக்கு பெருமை அளிக்கின்ற செய்தி : கலைஞர்

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
தமிழக மீனவர்கள் ஈரான், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலே உள்ள சிறைச்சாலைகளில் பல நாட்களாக வாடிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றனவே?

ஈரான் நாட்டு அதிகாரிகளால் தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அந்த நாட்டின் ஒரு தீவிலே உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குக் கூட இது பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதைப் போலவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் பக்ரைன் நாட்டிலிருந்து கத்தார் நாட்டு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 


மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 29 மீனவர்கள் துபாயிலிருந்தும், கத்தாரிலிருந்தும் சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது ஈரான் நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையிலே வைக்கப்பட்டுள்ளார்கள். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களைப் பற்றி மட்டுமே இதுவரை அக்கறை செலுத்தி வந்த நாம், இவர்களைப் பற்றியும் அக்கறை செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இவ்வாறு சிறையிலே அவதிப்படும் 79 தமிழக மீனவர்களையும் விரைவில் மீட்டு, தமிழகத்திற்கு அனுப்பி வைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதைப்பற்றி தமிழக அரசும் இதுவரை எந்த நடவடிக்கையோ, வேண்டுகோளோ மத்திய அரசுக்கு விடுக்காமல் இருந்தாலும், இனியாவது அவர்களைப் பற்றி அக்கறையோடு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.


இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை அரசு உரிய முக்கியத்துவம் கொடுக்காத நிலையில், இங்கிலாந்தில் உள்ள ஆளுங்கட்சி தமிழர்களுக்கு சிறப்பான தகுதி நிலை அளித்திருப்பதாக வந்துள்ள செய்தி பற்றி உங்கள் கருத்து?

இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான 'கன்சர்வேடிவ்' கட்சி, தனது கட்சிக்கான உப கட்சியாக பிரிட்டானியத் தமிழர்களைக் கொண்டு 'பிரிட்டிஷ் தமிழர்களின் கன்சர்வேடிவ்' கட்சி என்ற அமைப்பினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்ற செய்தி, உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்களுக்கு பெருமை அளிக்கின்ற செய்தியாகும். 

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கட்சியில் பிரித்தானிய தமிழர்கள் மட்டுமல்லாமல், இங்கிலாந்தில் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் அங்கம் வகிக்கின்றனர். 

பிரிட்டனில் அமைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கான இந்தப் புதிய கட்சியின் வாயிலாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான உந்துதல் ஏற்பட்டுள்ளது.
http://www.nakkheera...ws.aspx?N=84337 

No comments:

Post a Comment