Translate

Tuesday 27 November 2012

தீர்வுக்கு நேரடி அழுத்தம் கொடுத்து மஹிந்தவை அமெ. மடக்கவேண்டும்

"இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படுமெனில், அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். அரசின் கபடத்தனத்தையும், நழுவல் போக்கையும் நன்கு அறிந்து வைத்துள்ள அமெரிக்கா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைத்துப் பேச்சு நடத்தி, அவர்களைப் பொறுமை காக்கும்படி கூறுவது நியாயமற்றதாகும்'' இவ்வாறு நவசமசமாஜக் கட்சி தெரிவித்தது. 


"இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எவர் முட்டுக்கட்டையாக இருக்கின்றார் என்பதை சர்வதேசமே நன்கு அறிந்துவைத்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பில் ஒன்றுமே அறியாத சிறுபிள்ளைபோல அமெரிக்கா செயற்படுவது எமக்கு மட்டுமல்ல, தீர்வுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்ற அனைவருக்கும் கவலையளிக்கிறது" என அக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகள் எவ்வாறான கட்டத்தில் இருக்கின்றன? இதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்? இதற்கு எவர் தடையாக இருக்கிறார்கள் என்பவற்றை அமெரிக்கா நன்கு அறிந்துவைத்துள்ளது.

இலங்கையின் ஒவ்வொரு நகர்வையும் நன்றாக அவதானித்துவரும் அமெரிக்கா, தமது பிரதிநிதிகளையும் அவ்வப்போது இலங்கைக்கு அனுப்பி தீர்வு நடவடிக்கைகளின் நிலைவரம் குறித்து ஆராய்கின்றது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசுதான் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதால்தான் கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் அமெரிக்கா, இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றியது.

தீர்வுக்காக செய்யவேண்டியவற்றை உடனடியாகச் செய்யவேண்டும் என அமெரிக்கா கடுமையான அழுத்தங்களை அரசுக்குக் கொடுத்தால் அதனை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவார்.

ஏனெனில், நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிபந்தனைகள் அடிப்படையில் அமெரிக்கா உதவிகளை வழங்குகின்றது. இதை வாங்கிக்கொள்கின்ற அரசு, அதற்கேற்றாற்போல் செயற்படுகின்றது. இதுபோலவே இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் அமெரிக்கா, அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

இதனைச் செய்வதை விடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைத்துப் பேச்சு நடத்தி, அவர்களைப் பொறுமை காக்கும்படியும் அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றிப் பாருங்கள் என்று கூறுவதும் நியாயமற்றதாகும்.

அரசுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்த்து கூட்டமைப்பினரை அழைத்துப் பேச்சு நடத்தி சிறுபிள்ளைபோல் அமெரிக்கா செயற்படுவது எமக்கு மட்டுமல்ல, இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் கவலையளிக்கிறது என்றார் விக்கிரமபாகு கருணாரட்ன.

http://onlineuthayan...781648827419956 

No comments:

Post a Comment