Translate

Monday 26 November 2012

மட்டக்களப்பில் குடும்ப விவரங்களை திரட்டும் இராணுவம்!

மட்டக்களப்பில் உள்ள  குடும்ப விவரங்களை  இராணுவத்தினர் திரட்டிவருவதனால் மக்கள் அச்சத்தில்  இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று  குடும்ப விபரங்களைத் திரட்டுவதுடன், குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களையும் புகைப்படம் எடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


மேலும் சில குடும்பங்களில் கணவன்மார் வெளிநாடுகளில் உள்ளனர். அத்துடன் பகல் வேளைகளில் வீடுகளுக்கு இராணுவத்தினர் செல்வதனால் கணவன் தொழிலுக்கும் பிள்ளைகள் பாடசாலைக்கும் சென்றுள்ள நிலையில், குடும்பப் பெண்ணை தனியாக வைத்து புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.

எனவே இவ்வாறான சம்பவங்கள் அங்குள்ள பெண்கள் மத்தியில் அச்சத்தின உருவாக்கியுள்ளது. 

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர்களின் அனுமதியின்றி குறித்த பிரதேச மக்களின் குடும்ப விபரங்களை இராணுவத்தினர் திரட்டி வருவது குறித்து அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி ஆகியோரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இராணுவத்தினர் குடும்ப விபரங்களை எடுப்பது தங்களுக்கு தெரியாதெனவும், இனிமேல் இவ்வாறான விபரங்களை இராணுவத்தினர் சேகரிக்கும்போது மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவையாளர்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

எனினும் ரகசியமான முறையில் இராணுவத்தினர் இவ்வாறான விபரங்களைத் திரட்டுவது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தினை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment